உலகில் இதை முதல் முறையாக செய்திருக்கும் எலெக்ட்ரிக் கார் இதுதான்... மலைக்க வைத்த பிரம்மாண்ட சாதனை
18,751 அடி உயர பனிமலையில் ஏறி எலெக்ட்ரிக் கார் ஒன்று உலக சாதனை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக உலகம் வெகு வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கு ஆகும் செலவு மிக குறைவு. இது தவிர எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது.
ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களில் ஒரு சில குறைகளும் இருக்கவே செய்கின்றன. முக்கியமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் செயல்திறன் பெரிதும் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மலை ஏறாது, அதிக எடையை இழுக்காது என்பது போன்ற புகார்கள் வைக்கப்படுகின்றன.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை எல்லாம் சுக்குநூறாக்கியுள்ளது நியோ இஎஸ்8 (Nio ES8). இது எஸ்யூவி வகையை சேர்ந்த எலெக்ட்ரிக் கார் ஆகும். சீனாவை சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான நியோ இந்த காரை உருவாக்கி வருகிறது.
திபெத்தில் உள்ள 18,751 அடி உயர புரோக் காங்ரி என்ற பனி மலையின் உச்சியை நியோ இஎஸ்8 எலெக்ட்ரிக் எஸ்யூவி எட்டியுள்ளது. இதன்மூலம் இவ்வளவு பெரிய உயரத்தை எட்டிய உலகின் முதல் எலெக்ட்ரிக் கார் என்ற சாதனையை நியோ இஎஸ்8 படைத்துள்ளது.
உலகில் இதுவரை வேறு எந்த எலெக்ட்ரிக் காரும் 18,751 அடி உயர சிகரத்தில் ஏறியது இல்லை. எனவே நியோ இஎஸ்8 எலெக்ட்ரிக் எஸ்யூவி தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த சாதனையை படைத்த நேரத்தில் சென் ஹயி என்ற டிரைவர்தான் காரை ஓட்டி சென்றார்.

இந்த அரிய சாதனையை படைத்திருப்பதன் மூலம், எலெக்ட்ரிக் வாகனங்களின் செயல்திறனுடன் சேர்த்து, மிகவும் குறைவான வெப்ப நிலையில், அவற்றின் பேட்டரி திறனும் நிரூபித்து காட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பனிப்பொழிவு நிலவி வரும் சூழலில் இந்த தகவல் வெளிவந்துள்ளது கவனிக்கத்தக்கது.
அமெரிக்காவில் தற்போது வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்கு வெப்ப நிலை மைனஸில் சென்று கொண்டிருக்கிறது. எனவே அங்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் ஸ்டார்ட் ஆவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழ தொடங்கியுள்ளன.
அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் குறைந்து விட்டதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன. ரேஞ்ச் என்பது ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என்பதாகும். இந்த சூழலில் மிகவும் குறைவான வெப்பநிலையில், 18,751 அடி உயர பனிமலையில் ஏறியுள்ளது நியோ இஎஸ்8.

செயல்திறன் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் சூழலில், எலெக்ட்ரிக் கார்கள் பல்வேறு சாதனைகளை தொடர்ச்சியாக படைத்து கொண்டே வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் டெஸ்லா மாடல் எக்ஸ் எலெக்ட்ரிக் கார், 1,30,000 கிலோ எடை கொண்ட விமானத்தை கயிறு கட்டி இழுத்தது.
எலெக்ட்ரிக் வாகனம் ஒன்றால் இழுக்கப்பட்ட அதிகபட்ச எடை இதுதான். இதுவரை வேறு எந்த எலெக்ட்ரிக் வாகனமும் இவ்வளவு பெரிய எடையை இழுத்து சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் எலெக்ட்ரிக் வாகனங்கள் நன்கு பிரபலம் அடைந்து விட்டன.
ஆனால் இந்தியாவில் இன்னும் சொல்லிக்கொள்ளும்படியாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மக்களை சென்றடையவில்லை. இருந்தபோதும் 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் இயங்கும் மொத்த வாகனங்களில், 30 சதவீத வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
Source: Guinness World Records


Click it and Unblock the Notifications









