மாருதி சிஎன்ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்த டொயோட்டா திட்டம்!
மாருதி சுஸுகி உதவியுடன் சிஎன்ஜி எரிபொருள் வகை கார்களை அறிமுகப்படுத்த டொயோட்டா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி சுஸுகி - டொயோட்டா இடையிலான கூட்டணி முதலீட்டை குறைத்து வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இரு நிறுவனங்களும் பரஸ்பரம் பயன்பெறும் வகையில் இந்த திட்டங்களை செயல்படுத்தும் முனைப்பில் களமிறங்கி உள்ளன.

இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வருவதால், டீசல் கார்களுக்கான சந்தை வெகுவாக குறையும் என்று தெரிகிறது. இதனால், தனது பட்ஜெட் கார் மாடல்களில் டீசல் எஞ்சினை தொடர்ந்து பயன்படுத்த இயலாத நிலை டொயோட்டாவுக்கு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் எஞ்சின்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தி தொடர்ந்து பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், டீசல் கார்களுக்கான வர்த்தகத்தில் ஏற்படும் இழப்பை சரிகட்டுவதற்கு, மாற்று எரிபொருள் தேர்வுகளை டொயோட்டா அலசி ஆராய்ந்து வருகிறது.

மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தும் திட்டம் இருந்தாலும், அது உடனடியாக செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன. உடனடியாக அது டீசல் கார்களால் ஏற்படும் இழப்புகளை சரிகட்ட முடிாயது.

எனவே, தனது கூட்டாளி மாருதி சுஸுகியின் உதவியுடன் சிஎன்ஜி தொழில்நுட்பத்தை தனது பட்ஜெட் கார்களில் அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளில் டொயோட்டா இறங்கி இருக்கிறது. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

அதேநேரத்தில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் கார்களில் பயன்படுத்தப்படும் டீசல் எஞ்சின்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு தொடர்ந்து விற்பனையில் வைக்கப்பட இருக்கிறது. ஆனால், விலைதான் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அதிகரிக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

மேலும், பெட்ரோல் எஞ்சின் மற்றும் மைல்டு ஹைப்ரிட் மாடல்களையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, தனது சந்தையை ஓரளவு தக்க வைக்க முடியும் என்று டொயோட்டா நம்புகிறது.
Source: ET Auto


Click it and Unblock the Notifications








