டொயோட்டா ஃபார்ச்சூனர் பிஎஸ்-6 மாடல் விரைவில் அறிமுகம்
டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடல் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. ஆளுமையான தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின் மற்றும் நீடித்த உழைப்பு ஆகியவற்றுடன் வாடிக்கையாளர்களின் அந்தஸ்தை உயர்த்தும் கார் மாடலாகவும் விளங்குகிறது.

இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு நிகரான எஞ்சினுடன் விரைவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி தற்போது 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதில், பெட்ரோல் எஞ்சின் 164 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

டீசல் மாடலில் இருக்கும் 2.8 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 174 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இரண்டு மாடல்களிலும் ரியர் வீல் டிரைவ் அல்லது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது.

இந்த பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது. வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பிஎஸ்-6 ஃபார்ச்சூனர் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி ரூ.27.83 லட்சம் முதல் ரூ.33.60 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர் பிஎஸ்-6 மாடல்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளது.

இந்த கணிசமான விலை உயர்வு நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை அளிக்கும். ஆனால், மாசு உமிழ்வு குறைவாக இருக்கும் என்பதால், இந்த சுமையை வாடிக்கையாளர்கள் ஏற்க வேண்டியிருக்கும். ஃபோர்டு எண்டெவர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4, ஹோண்டா சிஆர்வி ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருந்து வருகிறது.


Click it and Unblock the Notifications








