இந்தியாவில் டொயோட்டா நிறுவனத்திற்கு வயது 20... வெற்றி கனிகளை சுவைத்த சுவாரஸ்ய பின்னணி இதுதான்
இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் 20 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அந்நிறுவனம் கடந்த வந்த பாதையை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெற்றி கொடி நாட்டியுள்ளது. இதில், இந்தியாவும் ஒன்று. உலகின் எஞ்சிய பகுதிகளை போல் இந்தியாவிலும் டொயோட்டா நிறுவன கார்கள் விற்பனை சக்கை போடு போட்டு வருகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், விலைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க கூடிய வாடிக்கையாளர்கள் நிறைந்த இந்தியாவிலும் கூட டொயோட்டா ஆதிக்கம் செலுத்துவதுதான்.

டொயோட்டா நிறுவனமானது கிர்லோஸ்கர் குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் கடந்த 1999ம் ஆண்டு தனது வியாபாரத்தை தொடங்கியது. தற்போது டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (Toyota Kirloskar Motor) நிறுவனமாக இந்தியாவில் 20 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த 2 தசாப்தங்களில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் பல்வேறு வெற்றி கனிகளை சுவைத்துள்ளது.

10 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்களை இந்தியாவில் விற்பனை செய்திருப்பது அதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று. தற்போதைய நிலையில் இன்னோவா கிரிஸ்டா, பார்ச்சூனர், கரொல்லா அல்டிஸ், கேம்ரி ஹைபிரிட், யாரிஸ், எட்டியோஸ், எட்டியோஸ் லிவா, எட்டியோஸ் க்ராஸ், ப்ராடோ, லேண்ட் க்ரூஸர், ப்ரையஸ் உள்ளிட்ட கார்களை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

தரம், பாதுகாப்பு, எரிபொருள் சிக்கனம், செயல்திறன் மற்றும் சௌகரியம் என வாடிக்கையாளர்களுக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் நாளுக்கு நாள் மெருகேற்றி கொண்டே வருகிறது. இந்தியாவில் அந்நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்க இது மிக முக்கியமான காரணம்.

இந்தியாவில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் பயணம் கடந்த 1999ம் ஆண்டு தொடங்கியது. அப்போது முதல் தயாரிப்பாக குவாலிஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்பின் கடந்த 2003ம் ஆண்டு கரொல்லா காரும், கடந்த 2005ம் ஆண்டு இன்னோவா காரும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

அதன்பின்பும் வரிசையாக பல்வேறு தயாரிப்புகளை இந்திய மார்க்கெட்டில் களமிறக்கியது டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார். இந்த வரிசையில் கடந்த 2009ம் ஆண்டு பார்ச்சூனர் காரும், கடந்த 2010ம் ஆண்டு எட்டியோஸ் காரும், 2016ம் ஆண்டு இன்னோவா கிரிஸ்டா காரும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டன. யாரிஸ் கடந்த 2018ம் ஆண்டு களமிறக்கப்பட்டது.

இந்த சூழலில் புதிய தலைமுறை கேம்ரி ஹைபிரிட் கார், கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் 10 லட்சம் கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் கடந்த 2014ம் ஆண்டு எட்டியது. இதன்பின் கடந்த 2017-18ம் நிதியாண்டில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் 1,40,645 கார்களை விற்பனை செய்தது. இதன்மூலம் நாட்டின் 6வது மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக உருவெடுத்தது.

'Customer First' என்பதே டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் முக்கிய கொள்கையாக உள்ளது. அதனால்தான் அந்நிறுவனத்தால் சாதிக்க முடிகிறது. சிறப்பான சேவை முதல் உயர் தர பாதுகாப்பு வரை தனது வாடிக்கையாளர்களுக்கு தேவையான அத்ததை அம்சங்களை ஒரே சீராக வழங்கி வரும் இந்நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டில், 'டொயோட்டா கனெக்ட் இந்தியா' என்ற ஸ்மார்ட்போன் செயலியை அறிமுகம் செய்தது. இதற்கென அமைக்கப்பட்டுள்ள பிரத்யேகமான கால் சென்டர் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கப்பட்டு வருகிறது.

முன்னதாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் முதல் ஓட்டுனர் பயிற்சி பள்ளி கடந்த 2015ம் ஆண்டு கொச்சியில் திறக்கப்பட்டது. இதன்பின் வெகு விரைவாகவே மேலும் 11 ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் சாலை பாதுகாப்பை முன்னிட்டு 'பாதுகாப்பான டிரைவர் உடன் பாதுகாப்பான கார்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் 2020ம் ஆண்டிற்குள், இந்தியா முழுவதும் 50 ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








