நர்பர்க்ரிங் ஸ்டைலில் டொயோட்டா அமைத்த ரேஸ் டிராக்!!
நர்க்பர்க்ரிங் வடிவமைப்பை ஒத்திருக்கும் புதிய மோட்டார் பந்தய களத்தை டொயோட்டா கார் நிறுவனம் அமைத்துள்ளது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஜெர்மனியில் உள்ள நர்பர்க்ரிங் மோட்டார் பந்தய களம் உலக புகழ்பெற்றது. இதன் மிக சவாலான தட வடிவமைப்பு உலகின் மிக திறமையான கார், பைக் பந்தய வீரர்களை கூட திணறிடித்துவிடும். மேலும், கார், பைக் நிறுவனங்கள் தங்களது திறன் வாய்ந்த கார், பைக்குகளை இந்த தடத்தில் வைத்து சோதனை நடத்துவதும் வாடிக்கை.

அதாவது, நர்க்பர்க்ரிங் மோட்டார் பந்தய களத்தில் ஒரு சுற்றை எவ்வளவு விரைவாக கடக்கின்றது என்பதை கணக்கிட்டு, அதனை சாதனையாக வெளியிட்டு தங்களது தயாரிப்பின் உன்னதத்தை பரைசாற்றுவது என்பது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், நர்க்பர்க்ரிங் மோட்டார் பந்தய களத்தின் வடிவமைப்பின் நகல் போன்ற ஒரு மோட்டார் பந்தய களத்தை ஜப்பானில் அமைத்துள்ளது டொயோட்டா கார் நிறுவனம். தனது புதிய கார் உருவாக்க மையத்தை ஒட்டியே இந்த புதிய மோட்டார் பந்தய சோதனை களத்தை டொயோட்டா நிறுவியுள்ளது.

இந்த புதிய மோட்டார் பந்தய களமானது டொயோட்டா மற்றும் ஒகஸாகி நகரங்களுக்கு இடையிலான மலைப்பிரதேச பகுதியில் இந்த புதிய பந்தய களம் மற்றும் தொழில்நுட்ப மையம் 650.8 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

நர்க்பர்க் மோட்டார் பந்தய களம் போன்றே, டொயோட்டாவின் புதிய பந்தய களம் 5.3 கிமீ நீளத்திற்கு அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில், 75 மீட்டர் தூரம் உயர்த்தப்பட்ட பாலமாக அமைந்நதுள்ளது. இது மூன்று பிரிவுகளாக செயல்படும். இதில், மையப்பகுதியானது டொயோட்டா நிறுவனத்தின் ஷிமோயாமா தொழில்நுட்ப மையத்தை ஒட்டியதாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

கிழக்கு மற்றும் மேற்கு பகுதியிலான பந்தய கள பணிகள் 2023ம் ஆண்டு நிறைவடையும். இதில், கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பந்தய களத்தில் கார்களை அதிவேகத்தில் சோதனை நடத்துவதற்கும், மேற்கு பகுதியானது கார்களை உருவாக்கும் பிரிவாகவும் செயல்படும்.

இந்த பந்தய களம் 300 பில்லியன் யென் முதலீட்டில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முதல்கட்டமாக இந்த பந்தய களத்தில் கார்களை சோதனை செய்வதற்காக 50 பேர் பணியமர்த்தப்பட்டு இருக்கின்றனர். இதில், பெரும்பாலானோர் கார்களை சோதனை செய்யும் திறன் பெற்ற டெஸ்ட் டிரைவர்களாக உள்ளனர்.

வரும் 2023ம் ஆண்டு பணிகள் முழுமையாக நிறைவு பெற்று முழு செயல்பாட்டுக்கு வரும்போது 3,000 பேர் இந்த மையத்தில் பணிபுரிவர். ஷிமோயாமா தொழில்நுட்ப மையம் என்ற பெயரில் டொயோட்டாவின் இந்த புதிய மோட்டார் பந்தய களம் செயல்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications








