ஒரு முறை சார்ஜ் செய்தால் 500, 400 கிமீ பயணிக்கும் எலெக்ட்ரிக் கார்கள்... உலகை கலக்கப்போகும் இந்தியா
ஒரு முறை சார்ஜ் செய்தால் 500, 400 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யும் வகையிலான எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகளவில் பயன்பாட்டு கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஃபேம் இந்தியா (FAME India- Faster Adoption And Manufacturing of (Hybrid &) Electric Vehicles India) என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்குவதற்காகவே ஃபேம் இந்தியா திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. முதற்கட்ட ஃபேம் இந்தியா திட்டம் வரும் 31ம் தேதியுடன் நிறைவடையும் சூழலில், 2ம் கட்டம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி 2ம் கட்ட ஃபேம் இந்தியா திட்டத்திற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஃபேம் இந்தியா திட்டத்தின் 2ம் கட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.

அதிகப்படியான மானியம் கிடைப்பதால், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க பலர் முன்வருவார்கள். எனவே எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் சுறுசுறுப்படைந்துள்ளனர். மத்திய அரசு அளித்துள்ள பெரும் ஊக்கம் காரணமாக, இந்தியாவில் இனி எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை சூடுபிடிக்கும்.

எனவே மத்திய அரசுக்கு அவர்கள் நன்றியும் தெரிவித்துள்ளனர். தற்போது இந்தியாவில் எஸ்யூவி வகை கார்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை மனதில் வைத்து ஏராளமான எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை இந்தியாவில் களமிறக்க உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதில், 3 எலெக்ட்ரிக் எஸ்யூவி வகை கார்கள், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அடுத்த 12 மாதங்களுக்கு உள்ளாக இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் அந்த 3 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் குறித்து இனி பார்க்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி (Mahindra XUV300 Electric SUV)
இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனம், கடந்த சில நாட்களுக்கு முன், எக்ஸ்யூவி300 எஸ்யூவி ரக காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்போது இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் மஹிந்திரா ஈடுபட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது எஸ்-210 (S-210) என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வரும் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி, 2020ம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் ஸ்டாண்டர்டு ரேஞ்ச் மற்றும் லாங் ரேஞ்ச் என்ற 2 வெர்ஷன்களில் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், ஸ்டாண்டர்டு வெர்ஷனில் 200 கிமீ வரையும், லாங் வெர்ஷனில் 350-400 கிமீ வரையும் பயணிக்க முடியும்.

பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை 11 வினாடிகளில் எட்டி விடக்கூடிய வகையில், எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காரை மஹிந்திரா நிறுவனம் வடிவமைக்கவுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 150 கிலோ மீட்டர்களாக இருக்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காரின் விலை 20 லட்ச ரூபாய்க்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி (Hyundai Kona Electric SUV)
தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்புதான் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி. கோனா எஸ்யூவி காரின் மூலமாக இந்திய எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட்டில் இந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக நுழைகிறது ஹூண்டாய்.

நடப்பாண்டின் 2வது பாதியில், அனேகமாக வரும் ஆகஸ்ட் மாதத்தில், ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 2 பேட்டரி ஆப்ஷன்களுடன் வரலாம் எனவும் கூறப்படுகிறது.

அதாவது ஒரு முறை சார்ஜ் செய்தால் முறையே 312 கிலோ மீட்டர் மற்றும் 482 கிலோ மீட்டர்கள் பயணிக்கும் வகையில், 39kW மற்றும் 64kW என 2 பேட்டரி ஆப்ஷன்களுடன் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 9.7 வினாடிகளில் எட்டிவிடும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 155 கிலோ மீட்டர்கள். இந்த காரின் எதிர்பார்க்கப்படும் விலை 25 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்).

எம்ஜி இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் (MG eZS Electric)
பிரிட்டனை சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் வலுவாக காலூன்ற முடிவு செய்துள்ளது. ஹெக்டர் என்ற எஸ்யூவி ரக கார்தான் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ள முதல் காராக இருக்கப்போகிறது.

இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2வது மாடல் ஆல் நியூ எலெக்ட்ரிக் எஸ்யூவி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் இஇஸட்எஸ். இதன் எலெக்ட்ரிக் மோட்டார் 150 பிஎச்பிக்கும் நெருக்கமான பவரை உருவாக்க கூடியதாக இருக்கும்.

பூஜ்ஜியத்தில் இருந்து 50 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.1 வினாடிகளில் எட்டி விடக்கூடியதாக எம்ஜி இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி வடிவமைக்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலை 20 லட்ச ரூபாய்க்குள்.



Click it and Unblock the Notifications








