இந்தியா வருகிறது ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ கார்?
புதிய ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ காரை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்த திட்டங்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஐரோப்பிய நாடுகளில் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் கார் மிகவும் பிரபலமான பிரிமீயம் ஹேட்ச்பேக் ரக மாடலாக வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் செயல்திறன் மிக்க மாடலாக கோல்ஃப் ஜிடிஐ கார் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. சக்திவாய்ந்த எஞ்சின் மட்டுமின்றி, கூடுதல் சிறப்பம்சங்களை இந்த ஜிடிஐ மாடல் பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதியில் 8-வது தலைமுறை கோல்ஃப் கார் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் அடிப்படையிலான ஜிடிஐ மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து ஃபோக்ஸ்வேகன் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மத்திய அரசு கொடுத்துள்ள சிறப்பு விலக்கின் அடிப்படையில், முதல் 2,500 கார்களை எந்த மாற்றமும் இல்லாமல் இறக்குமதி செய்து விற்பனை செய்ய முடியம். அதன் அடிப்படையில், ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ கார் மாடலானது இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த காருக்கு அதிக வரவேற்பு கிடைக்கும்பட்சத்தில், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும் வாய்ப்பும் இருக்கிறது. இதன்மூலமாக, விலையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 252 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ காரில் தோற்றத்தில் பல கூடுதல் சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கும். அத்துடன், சிறப்பான சஸ்பென்ஷன், பெரிய ஏர் இன்டேக் அமைப்பு, திறன்மிக்க பிரேக் சிஸ்டம், இரட்டை சைலென்சர் குழல்கள், ரியர் ஸ்பாய்லர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

இறக்குமதி செய்து விற்பனை செய்ய வேண்டி இருப்பதால், ரூ.40 லட்சம் விலையில் புதிய ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு இருக்கிறது.
Source: Autocarindia


Click it and Unblock the Notifications








