ஒரே தலைமையின் கீழ் மாறும் ஆடி, லம்போர்கினி, ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் !
ஆடி, லம்போர்கினி, ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் ஒரே தலைமையின் கீழ் செயல்படுவதற்கான திட்டத்திற்கு ஃபோக்ஸ்வேகன் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் வாகன தயாரிப்பு குழுமத்தின் கீழ் ஏராளமான கார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆடி, ஸ்கோடா, லம்போர்கினி, புகாட்டி என உலகின் பல முன்னணி கார் பிராண்டுகள் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

எனினும், உலகின் பல்வேறு நாடுகளில் இந்த நிறுவனங்கள் அனைத்தும் தனித்தனி தலைமையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் ஆடி, லம்போர்கினி, ஃபோக்ஸ்வேகன், ஸ்கோடா ஆட்டோ ஆகிய கார் நிறுவனங்கள் தற்போது தனித்தனி நிறுவனமாக செயல்பட்டு வருகின்றன.

இவற்றை ஒரே தலைமையின் கீழ் கொண்டு வருவதற்கான திட்டத்தை ஃபோக்ஸ்வேகன் குழுமம் முடிவு செய்தது. இதற்கான ஒப்புதலையும் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் நிர்வாகம் வழங்கி இருக்கிறது. இதனை ஃபோக்ஸ்வேகன் இந்தியா மற்றும் ஸ்கோடா இந்தியா நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வரும் குருபிரதாப் போபராய் தெரிவித்துள்ளார்.

இதன்மூலமாக, நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் எடுக்க வேண்டிய முடிவுகளை மிக விரைவாக எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். ஒரே தலைமையின் கீழ் வந்தாலும், அனைத்து பிராண்டுகளும் தனித்தனி கட்டமைப்புடன் தொடர்ந்து செயல்படும். ஷோரூம்கள் மற்றும் கீழ்மட்ட நிர்வாக அமைப்பில் பெரிய மாற்றங்கள் இருக்காது.

மேலும், இந்திய மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிப்பதற்காக புதிய திட்டத்தை ஃபோக்ஸ்வேகன் குழுமம் தீட்டி வருகிறது. இந்தியா 2.0 புரொஜெக்ட் என்ற பெயரிலான இந்த திட்டத்தை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் முன்னெடுத்து செயல்படுத்த இருக்கிறது.

இந்த புதிய திட்டத்தின் மூலமாக பல புதிய கார் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. மேலும், புத்தம் புதிய எஸ்யூவி மாடல்களையும் ஃபோக்ஸ்வேகேன் குழுமம் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் பிராண்டுகளில் களமிறக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, புனே நகரில் புதிய தொழில்நுட்ப மையத்தை ஸ்கோடா நிறுவனம் திறந்துள்ளது.

வரும் 2023ம் ஆண்டிற்குள் இந்தியாவில் விற்பனையை 4 மடங்கு உயர்த்தும் இலக்குடன் இந்த புதிய வர்த்தக திட்டத்தை ஃபோக்ஸ்வேகன் குழுமம் கையில் எடுத்துள்ளது. நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் பணிகளுக்கான சட்ட விதிமுறைகள் சாத்தியமாகும் பட்சத்தில், இந்த இணைப்பு நடவடிக்கை குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








