புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி மற்றும் பிஎஸ்6 ரேபிட் காருக்கு புக்கிங் துவங்கியது!
ஸ்கோடா நிறுவனத்தின் புத்தம் புதிய கரோக் எஸ்யூவிக்கும், பிஎஸ்6 எஞ்சின் பொருத்தப்பட்ட ரேபிட் காருக்கும் முன்பதிவு துவங்கி இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் புதிய வர்த்தக திட்டத்துடன் தீவிரமாக களமிறங்கி இருக்கிறது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம். கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் புதிய கார் மாடல்களையும் காட்சிப்படுத்தி இருந்தது. இதில், கரோக் எஸ்யூவி அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில், கரோக் எஸ்யூவிக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவிக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அடிப்படையிலான கட்டமைப்புக் கொள்கையில்தான் இந்த புதிய மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி 4.3 மீட்டர் நீளத்துடன் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் தடம் பதிக்க உள்ளது. ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலையை ஒட்டி கரோக் எஸ்யூவியின் விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், 17 அங்குல அலாய் வீல்கள், 8.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 9 ஏர்பேக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கும்.

இந்த புதிய எஸ்யூவியில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் 150 எச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 9 வினாடிகளில் எட்டிவிடும்.

இந்த எஸ்யூவி மணிக்கு 202 கிமீ வேகம் வரை செல்லும். வெளிநாடுகளில் 4 வீல் டிரைவ் மாடலிலும் கிடைக்கிறது. இந்தியாவில் ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலில் மட்டுமே வர இருக்கிறது. புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. முன்பதிவு செய்வோருக்கு மே 6ந் தேதி முதல் டெலிவிரி கொடுக்கப்படும்.

அடுத்து ஸ்கோடா ரேபிட் காரின் பிஎஸ்-6 மாடலுக்கும் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய ஸ்கோடா ரேபிட் காரில் எல்இடி பகல்நேர விளக்குகள், 16 அங்குல அலாய் வீல்கள், ரியர் டிஃபியூசர், டிரங்க் ஸ்பாய்லர், ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மிக விரைவில் வர இருக்கும் இந்த காரை முன்பதிவு செய்வோருக்கு ஏப்ரல் 14ந் தேதி முதல் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்கோடா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் அல்லது ஸ்கோடா நிறுவனத்தின் இணையதளத்தின் மூலமாக ரூ.50,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள டீலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








