ஹெக்டருக்கு போட்டியாக வரும் புத்தம் புதிய ஸ்கோடா எஸ்யூவி... எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய மிட்சைஸ் எஸ்யூவி அறிமுகம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எம்ஜி ஹெக்டருக்கு போட்டியாக வர இருக்கும் இந்த புதிய ஸ்கோடா எஸ்யூவி எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது, அதன் முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பதை தொடர்ந்து காணலாம்.

இந்திய கார் சந்தையில் வலுவான வர்த்தகத்தை பெறுவதற்காக பல புதிய கார் மாடல்களை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தொடர்ந்து அறிமுகப்படுத்த உள்ளது. புராஜெக்ட் 2.0 என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த திட்டத்தின் கீழ் பல புதிய எஸ்யூவி மாடல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், அதிக வர்த்தக வாய்ப்புள்ள எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய மாடல்களை களமிறக்க ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. இதன்படி, புத்தம் புதிய மிட்சைஸ் எஸ்யூவியை அந்நிறுவனம் களமிறக்க உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட ஸ்கோடா விஷன் ஐஎன் என்ற கான்செப்ட் மாடலின் அடிப்படையில் இந்த புதிய மிட்சைஸ் எஸ்யூவி உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த புதிய எஸ்யூவி வருகை குறித்து ஸ்கோடா இந்தியா நிர்வாக இயக்குனர் ஸாக் ஹொல்லிஸ் ட்விட்டரில் முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். அதில், அடுத்த ஆண்டு இரண்டாவது காலாண்டு காலத்தில் புத்தம் புதிய மிட்சைஸ் எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதாவது, ஏப்ரல்- ஜூன் இடையிலான காலக்கட்டத்தில் ஸ்கோடாவின் புத்தம் புதிய மிட்சைஸ் எஸ்யூவி இந்தியாவில் களமிறக்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. இந்த மாடல் டிசைனில் மிகச் சிறப்பாக இருப்பதுடன், வாடிக்கையாளர்களை கவரும் பல விஷயங்கள் இடம்பெற்றிருக்கும்.

மேலும், போட்டியாளர்களுக்கு சவால் கொடுக்கும் விதத்தில், விலையை மிக சவாலாக நிர்ணயிக்கவும் ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. இதற்காக, இந்த புதிய எஸ்யூவிக்கு 90 சதவீதம் அளவுக்கான உதிரிபாகங்கள் இந்திய சப்ளையர்களிடம் இருந்தே பெறப்படும்.

புதிய ஸ்கோடா மிட்சைஸ் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு வரும் வாய்ப்புள்ளது. இந்த எஞ்சின் 150 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனஐயும் வெளிப்படுத்தும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கலாம்.

பிளவுப்பட்ட அமைப்புடன் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பனி விளக்குகள், 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 9.2 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

இந்த தகவலுடன் புதிய மிட்சைஸ் செடான் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் திட்டம் குறித்தும் ஸாக் ஹொல்லிஸ் குறிப்பிட்டுள்ளார். அதில், அடுத்த ஆண்டு இறுதியில் புதிய மிட்சைஸ் செடான் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இது ஸ்கோடா ரேபிட் காருக்கு மாற்றாக வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








