'தயவுசெய்து கராஜ் உள்ளே வந்துவிடு'... தார் எஸ்யூவியை பார்த்து ஆனந்த் மஹிந்திரா வெறித்தனமான ட்விட்!
புதிய தலைமுறை தார் எஸ்யூவியை பார்த்து மோகம் கொண்டுள்ள ஆனந்த் மஹிந்திரா தயவுசெய்து உள்ளே வந்துவிடு என்று ட்விட்டியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை சுதந்திர தினத்தன்று, புதிய தலைமுறை தார் எஸ்யூவி பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. முன்புறத் தோற்றம் ஜீப் ரேங்லர் எஸ்யூவியை ஒத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தாலும், ஒட்டுமொத்த வடிவமைப்பில் அசத்தலாக மாறி இருக்கிறது புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி.

பாகங்களின் தரம், ஃபிட் அண்ட் ஃபினிஷ், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சக்திவாய்ந்த புதிய பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள், மேனுவல் மட்டுமின்றி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு, 4 வீல் டிரைவ் என ஒரு பிரிமீயம் ஆஃப்ரோடு எஸ்யூவிகளுக்கு நிகரான அம்சங்களுடன் மிக சரியான பட்ஜெட்டில் வர இருக்கிறது.

பார்ப்போரை எல்லாம் காதல் வயப்பட செய்துள்ள புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி வரும் அக்டோபர் 2ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அன்றைய தினமே முன்பதிவும் துவங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை பார்த்த பல ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்கள் மற்றும் புதிய எஸ்யூவி கார் வாங்க திட்டமிட்டிருப்போர் மஹிந்திரா ஷோரூம்களில் விசாரணையை போடத் துவங்கியுள்ளனர். புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு ரகசியமாக முன்பதிவு ஏதும் நடக்கிறதா என்று தங்களது பெயரை முன்பதிவு செய்வதற்காக வினவி வருகின்றனர்.

இந்த சூழலில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவும், புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியை ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார். அவர் புதிய தார் எஸ்யூவி மீது எந்தளவு மோகம் கொண்டுள்ளார் என்பது பட்டவர்த்தனமாக தெரிய வந்துள்ளது.

வழக்கம்போல் தனது ஸ்டைலில் ட்விட்டரில் புதிய தார் எஸ்யூவி குறித்து ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், எனக்கு இது இப்போதே வேண்டும் என்று கூறியதோடு நிற்காமல், அடுத்து, தயவுசெய்து எனது கராஜ் உள்ளே வந்துவிடு," என்று தீரா மோகத்துடன் ஒரு பதிவை ட்விட்டரில் போட்டிருக்கிறார். அத்துடன், நான் நிச்சயமாக மாஸ்க் அணிந்து கொள்வேன். இந்த புதிய தாரில் ஒருமுறை வெளியில் சுற்றி வர வேண்டும்," என்று தார் எஸ்யூவியுடன் தனது எதிர்கால திட்டம், விருப்பங்கள் குறித்தும் அடுத்தடுத்து ட்விட்டுகளை போட்டு வருகிறார்.

பொதுவாக, அவருக்கு பிடித்தமான புதிய மஹிந்திரா எஸ்யூவி மாடல்களை உடனடியாக தனது சொந்த பயன்பாட்டிற்கு வாங்கி தனது கராஜில் நிறுத்திவிடுவார். ஏற்கனவே, மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியை கஸ்டமைஸ் செய்து சொந்தமாக்கினார்.

அதில் அலுவலக பயன்பாட்டிற்கும் பயன்படுத்துவது வழக்கம். இந்த நிலையில், மிக ஸ்டைலாக மாறி இருக்கும் புதிய தலைமுறை தார் எஸ்யூவியையும் அவர் சொந்த பயன்பாட்டிற்காக வாங்கி இருப்பது அவரது ட்வீட் மூலமாக உறுதியாகி இருக்கிறது. அதாவது, முதல் தார் எஸ்யூவி அவருக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும், அனைத்து அலங்கார விஷயங்களையும் செய்து அவர் வாங்கி பயன்படுத்துவார். அந்த அளவுக்கு அவர் கார்கள் மீது காதல் கொண்டவர். தற்போது புதிய தார் எஸ்யூவியின் ஸ்டைலும், சிறப்பம்சங்களும் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, அந்நிறுவனத்தின் தலைவரையே ஈர்த்துள்ளது.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியானது அகலம் கூடி இருப்பதுடன், மிக ஸ்டைலான தோற்றத்தை பெற்றிருக்கிறது. ஹார்டு டாப் எனப்படும் நிரந்தரமாக மூடிய கூரை அமைப்பு, கழற்றி மாட்டும் கூரை அமைப்பு, கன்வெர்ட்டிபிள் என மூன்று விதமாக வர இருக்கிறது.

இதுவரை ஆஃப்ரோடு சாகசப் பிரியர்கள், மலைப்பாங்கான பகுதிகளில் கரடுமுரடான சாலைகளுக்கு உகந்ததாக விற்பனை செய்யப்பட்டு வந்த மஹிந்திரா தார் எஸ்யூவி இனி நகர்ப்புறம் மற்றும் நெடுஞ்சாலை பயன்பாடுகளுக்கு ஏற்ற அம்சங்களுடன் வர இருக்கிறது.

முன்னோக்கிய பின் இருக்கைகள், ஏசி வசதி, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு வசதிகள், சக்திவாய்ந்த 2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வருகிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் 4 வீல் டிரைவ் சிஸ்டம் அனைத்து வேரியண்ட்டுகளிலும் கொடுக்கப்பட உள்ளது.

புதிய மஹிந்திரா எஸ்யூவியில் சாகசப் பயன்பாடுகளுக்கு ஏற்ற தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இது நிச்சயம் ஆஃப்ரோடு மற்றும் சாதாரண வகை எஸ்யூவி பிரியர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவிக்கு இது நேரடி போட்டியாக அமையும். ஜீப் நிறுவனம் ரூ.10 லட்சத்தில் புதிய எஸ்யூவியை கொண்டு வர இருப்பதாக கூறி வரும் நிலையில், அதற்கு முன்னதாகவே அதற்கு இணையான அம்சங்களுடன் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி நிலைநிறுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








