மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னுதாரணம்... மாஸ் காட்டும் ஆந்திர அரசின் புதிய திட்டம்... என்னனு தெரியுமா?
எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பாக பல்வேறு புதிய திட்டங்களை ஆந்திர பிரதேச அரசு வகுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி துறையில் 30,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவும், 60,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஆந்திர பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. அத்துடன் வரும் 2024ம் ஆண்டிற்குள் 10 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான திட்டங்களையும் அம்மாநில அரசு வகுத்துள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக, உற்பத்தி ஆலைகளுடன் இணைந்து, முழுமையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. நிதி ஆயோக் அமைப்பால் கூட்டப்பட்ட உயர்மட்ட கூட்டத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த தனது திட்டங்களை ஆந்திர மாநில அரசு வழங்கியது.

மேலும் ஆந்திர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் 11,000 பேருந்துகளும் வரும் 2029ம் ஆண்டுக்குள் எலெக்ட்ரிக் பேருந்துகளாக மாற்றப்படும் எனவும் அம்மாநில அரசு கூறியுள்ளது. இந்த கூட்டத்தில் ஆந்திர பிரதேச அரசின் போக்குவரத்து துறை மற்றும் தொழில் துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

டாப்-4 நகரங்களான விசாகப்பட்டிணம், விஜயவாடா, திருப்பதி மற்றும் குண்டூர் ஆகிய நகரங்களில், வரும் 2024ம் ஆண்டிற்குள் பெட்ரோல், டீசல் வாகனங்களை படிப்படியாக வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் நிதி ஆயோக் அமைப்பிடம் ஆந்திர பிரதேச மாநில அரசு கூறியுள்ளது. அதே சமயம் அனைத்து நகரங்களிலும், வரும் 2030ம் ஆண்டிற்குள் பெட்ரோல், டீசல் வாகனங்களை வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் 2024ம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கு பெரும் பற்றாக்குறை நிலவி வருகிறது. மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற தயங்குவதற்கு இதுவே முக்கியமான காரணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதை ஊக்குவிக்கும் வகையில், சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிகளவில் கட்டமைக்க ஆந்திர பிரதேச மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரி ஒருவர், ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு வாகனங்களும் வரும் 2024ம் ஆண்டிற்குள் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்படும் என கூறினார்.

தற்போதைய நிலையில் இந்தியாவிற்கு எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் மிகவும் அவசியமான தேவையாக உள்ளன. ஏனெனில் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால் சுற்றுச்சூழல் மிக கடுமையாக பாதிக்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் இந்த பிரச்னையை குறைக்க முடியும்.

அத்துடன் கச்சா எண்ணெய் இறக்குமதியையும் குறைக்கலாம். எனவே மத்திய அரசும், கர்நாடகா, கேரளா, டெல்லி போன்ற பல்வேறு மாநில அரசுகளும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








