சொகுசு கார்களின் விற்பனை தள்ளாடும் நிலையில் ஆடி நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு... என்னனு தெரியுமா?
சொகுசு கார்களின் விற்பனை தள்ளாடி வரும் நிலையில், ஆடி நிறுவனம் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்பட்ட பிறகு, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் புதிய கார் விற்பனை மிக கடுமையாக வீழ்ச்சியடைந்தது. அதன்பின் வந்த மாதங்களில் கார்களின் விற்பனை ஓரளவு உயர்ந்தது. ஆனால் கடைசி இரண்டு மாதங்களில், அதாவது செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், இந்தியாவில் புதிய கார்களின் விற்பனை வெகு சிறப்பாக அமைந்துள்ளது.

இதற்கு பண்டிகை காலம் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இதுதவிர கொரோனா வைரஸ் அச்சமும் கார்களின் விற்பனை உயர்ந்திருப்பதற்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது. பேருந்து, ஆட்டோ, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்தினால், கொரோனா தொற்று ஏற்படலாம் என மக்கள் அச்சப்படுகின்றனர்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

எனவே அதற்கு பதிலாக சொந்த கார்களில் பயணம் செய்வதை அவர்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். அதே சமயம் கொரோனா ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடிகளையும் கருத்தில் கொண்டு சிறிய கார்களை பலர் வாங்கி வருகின்றனர். எனவே சொகுசு கார்களின் விற்பனை இன்னும் வீழ்ச்சியில் இருந்து மீண்டு வரவில்லை.

மாருதி சுஸுகி மற்றும் டாடா போன்ற நிறுவனங்கள் சிறப்பான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ள நிலையில், இந்திய சந்தையில் தற்போது சொகுசு கார் நிறுவனங்கள் தள்ளாடி கொண்டுள்ளன. இப்படிப்பட்ட ஒரு சூழலில், கார்களின் விலையை உயர்த்தும் முடிவை எடுத்துள்ளதாக ஆடி சொகுசு கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஆடி, இந்திய சந்தையில் ஏராளமான ரசிகர்களையும், வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. இந்திய சந்தையில் தற்போது கிடைக்கும் ஆடி நிறுவனத்தின் அனைத்து கார்களின் விலையும் 2 சதவீதம் வரை உயரவுள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால், கார்களின் விலையை உயர்த்தும் முடிவை ஆடி நிறுவனம் எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஆடி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''ஆடி இந்தியா மாடல்களின் எக்ஸ் ஷோரூம் விலை, வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 2 சதவீதம் வரை உயரும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவரான பல்பீர் சிங் தில்லான் கூறுகையில், ''எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததை கொடுக்க முயற்சி செய்து வருகிறோம். ஆனால் அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகளும், கரன்ஸி ஏற்ற, இறக்கங்களும் எங்கள் செலவு கட்டமைப்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.

எனவே விலைகளை திருத்தியமைத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்'' என்றார். இந்தியாவில் ஏற்கனவே சொகுசு கார்களின் விற்பனை மோசமான நிலையில் இருந்து வரும் சூழலில், ஆடி இந்தியா நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவு காரணமாக, அந்த நிறுவனத்தின் கார்களின் விற்பனை மேலும் பாதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








