ஆட்டோ எக்ஸ்போ 2020: மலிவு விலை ரெனோ ட்ரைபர் காரில் ஏஎம்டி அறிமுகம்... கூடுதல் தகவல்..!
இந்திய எம்பிவி ரக கார் சந்தையில் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ரெனால்ட் நிறுவனத்தின் ட்ரைபர் காரில் ஏஎம்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எப்போது விற்பனைக்கு வரும், எவ்வளவு விலையுயர்வைப் பெற்றிருக்கின்றது என்பது குறித்த தகவலை கீழே காணலாம்.

இந்தியர்களின் எம்பிவி ரக கார் கனவை பூர்த்தி செய்யும் வகையில் ரெனால்ட் நிறுவனம் கடந்த ஆண்டு மலிவு விலை ட்ரைபர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அதற்கு முன்பு வரை பட்ஜெட் தட்டு மக்களுக்கு எட்டாத கனியாக இருந்த எம்பிவி ரக காரானது ட்ரைபரின் அறிமுகத்திற்கு பின்னரே சாத்தியமானது.

குறிப்பாக, இது யாரும் எதிர்பாராத விலையில் இந்தியாவில் விற்பனைக்கு களமிறங்கியது. இதனால், இந்திய எம்பிவி ரக கார்கள் சந்தையில் ரெனால்ட் ட்ரைபர் தற்போது புரட்சியைச் செய்து கொண்டிருக்கின்றது.
இதன் விலை மலிவானதாக இருந்தாலும் பல்வேறு சிறப்பு வசதிகளை உள்ளடக்கியதாக காட்சியளிக்கின்றது. ஆனால், இந்த ட்ரைபரில் ஒன்று மட்டுமே குறையாக காட்சியளித்து வந்தது.

அதையும் ரெனால்ட் நிறுவனம் தற்போது நிவர்த்தி செய்துள்ளது. ரெனால்ட் ட்ரைபவர் எம்பிவி காரில் ஏஎம்டி அறிமுகம் செய்யப்படாததே குறையாக இருந்தது. ஏஎம்டி என்பது ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் அம்சம் ஆகும். இதைதான் தற்போது ரெனால்ட் நிறுவனம் அதன் மினி எம்பிவி காரில் அறிமுகம் செய்திருக்கின்றது.

உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டா என்னும் பகுதியில் 2020ம் ஆண்டிற்கான ஆட்டோ எக்ஸ்போ நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இங்கு பல உலகளாவிய நிறுவனங்கள் அதன் புத்தம் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன்.
இங்குதான் ரெனால்ட் நிறுவனம் அதன் சிறப்பு வாய்ந்த காரை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த அப்கிரேட்தான் இந்த ரெனால்ட்டில் வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய அப்டேட்டாகும்.

ரெனால்ட் இந்த ட்ரைபர் எம்பிவி காரை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தகுந்தது. தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த கார் இந்தியாவில் நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் இருந்து விற்பனைக்கு கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, ஆர்எக்ஸ்இசட் என்ற வேரியண்டில் கிடைக்க உள்ளது.

இந்த எஞ்ஜின் 1.0 லிட்டர் கொண்ட மூன்று சிலிண்டர் பெட்ரோல் மோட்டாராகும். இது அதிகபட்சமாக 72 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது.
ஐந்து வேக கட்டுப்பாடு திறன் கொண்ட இந்த ஏஎம்டி எஞ்ஜின் முன்பக்க சக்கரத்தை இயக்கும் தன்மையை கொண்டுள்ளது.

இத்துடன், இந்த சிறப்பு வாய்ந்த காரை தனித்துவமாக அடையாளப்படுத்தும் விதமாக காரின் பக்கவாட்டு பகுதியில் ஈசி-ஆர் என்ற டேக்குகள் ஒட்டப்பட்டுள்ளது. இது, ட்ரைபரை ஏஎம்டி என தனிப்படுத்தி காட்டும். இதன் கேபினானது எம்டி வேரியண்டைப் போன்றே சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றது. ஆனால், கியர்லிவர் மட்டும் சற்று வித்தியாசமானதாக உள்ளது.

இத்துடன், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டரில் லேசான மாடிஃப்கிஷேன் செய்யப்பட்டுள்ளது. தானியங்கி கியர்பாக்ஸ் என்பதால் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்த வருடமே களமிறங்க இருக்கும் இந்த கார் ரூ. 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் விலை அதிகரிப்பைக் கொண்டு களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஏஎம்டி வசதி கொண்ட ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஏஎம்டி மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் ஏஎம்டி கார்களுக்கு போட்டியாக இருக்கும். ஏற்கனவே, இந்த கார் இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அம்சம் இதன் விற்பனையை இன்னும் அதிகரிக்கச் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








