பிஎம்டபிள்யூ ஐ8 ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் காருக்கு விரைவில் மூடுவிழா!
உலக அளவில் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பிஎம்டபிள்யூ ஐ8 ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் காரின் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பிஎம்டபிள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் கார் ஹைப்ரிட் கார்களில் அதிக செயல்திறன் மிக்க மாடலாக பெருமை பெற்றது. இதனால், சச்சின் டெண்டுல்கர் முதல் ஷில்பா ஷெட்டி வரை இந்த காரை போட்டி போட்டு வாங்கினர். மேலும், இந்த காரின் டிசைனும், செயல்திறனும் மிரட்டலாக இருந்தது.

பிஎம்டபிள்யூ ஐ8 கார் கூபே மற்றும் ரோட்ஸ்டெர் என இரண்டு மாடல்களில் கிடைத்து வந்தது. இந்த காரில் கல்விங் வகையிலான கதவுகள் மேல்நோக்கி திறக்கும் அமைப்பு, 4 பேர் பயணிப்பதற்கான வசதி, ப்ளக் இன் ஹைப்ரிட் தொழில்நுட்பம் என ஏராளமான சிறப்புகளை பெற்றிருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் இணைந்து செயலாற்றும். இவை இரண்டும் சேர்ந்து அதிகபட்சமாக 357 பிஎச்பி பவரையும், 570 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

மேலும், இதன் 11.6kWh பேட்டரியை பயன்படுத்தி, பெட்ரோல் எஞ்சின் துணையில்லாமல் 53 கிமீ தூரம் பயணிக்க முடியும் என்பதுடன், இந்த எலெக்ட்ரிக் மோட்டார் மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லும் திறனை வழங்கியது.

இதனால், வாடிக்கையாளர்கள் இந்த காரை உச்சிமுகர்ந்து வாாங்கினர். மேலும், மிக குறைவான டிராக் கோ எஃபிசியன்ட் கொண்ட மாடலாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், அதிக மைலேஜை இந்த கார் வழங்கும் தொழில்நுட்பத்தை பெற்றிருந்தது.

இந்த காரில் கார்பன் ஃபைபர் பிளாக் மற்றும் அலுமினிய சேஸீ பயன்படுத்தப்பட்டு இருந்தது. பெரும்பாலான பாகங்களை மறுசுழற்சி செய்யும் தன்மையுடன் இந்த கார் உருவாக்கப்பட்டது. இதனால், சுற்றுச்சூழலுக்கு பல்வேறு விதத்திலும் உகந்த மாடலாக இருந்தது.

இந்த நிலையில், தற்போது எலெக்ட்ரிக் கார்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு விதிகள் வகுக்கப்படுவதும், வாடிக்கையாளர்கள் கவனம் திரும்பி இருப்பதால் இந்த ஹைப்ரிட் காருக்கு விடை கொடுக்க பிஎம்டபிள்யூ முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் இந்த காரின் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட இருக்கிறது.

இதுவரை உலக அளவில் 20,000 பிஎம்டபிள்யூ ஐ8 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு இறுதி லாட்டில் டெலிவிரி கொடுக்கப்படும் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த காரின் உருவாக்கம், உற்பத்திப் பணிகள் மூலமாக பல்வேறு யுக்திகளையும், தொழில்நுட்பங்களையும் கற்றுவிட்டதாகவும், இதன் தொழில்நுட்பங்கள் எதிர்கால எலெக்ட்ரிக் கார்களில் பயன்படுத்த முடியும் என்று கருதி, இந்த காரின் உற்பத்தியை நிறுத்த பிஎம்டபிள்யூ முடிவு செய்துள்ளது.

வரும் 2023ம் ஆண்டில் 25 புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரும் திட்டத்தை பிஎம்டபிள்யூ கையில் எடுத்துள்ளது. அதில், கவனம் செலுத்தும் வகையிலும், உற்பத்திப் பிரிவை எலெக்ட்ரிக் கார்களுக்கு பயன்படுத்தும் விதத்திலும் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








