இதெல்லாம் சரியாகும்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் காரை களமிறக்குவோம்... பிஎம்டபிள்யூ அதிகாரி பேட்டி!
எலெக்ட்ரிக் கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்த பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் நிலைப்பாடு குறித்த அந்நிறுவனத்தின் அதிகாரி திடமான பதில் ஒன்றை அளித்துள்ளார். அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை மெல்ல வளரத் துவங்கி இருக்கிறது. இதனை மனதில் வைத்து அனைத்து வாகன நிறுவனங்களும் எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான திட்டங்களை துவங்கி இருக்கின்றன. சொகுசு கார் மார்க்கெட்டில் முதலிடத்தில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அண்மையில் தனது இ.க்யூ.சி என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காரை விற்பனைக்கு கொண்டு வந்தது.

இந்த நிலையில், விற்பனையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு அடுத்த இடத்தில் உள்ள பிஎம்டபிள்யூ, எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் கொண்டு வருவது குறித்த நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.

இதுகுறித்துஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைமை செயல் அதிகாரி விக்ரம் பவா,"எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த விரும்புகிறோம். அதேநேரத்தில், எலெக்ட்ரிக் கார் விற்பனையை ஊக்கப்படுத்துவதற்கான திட்டங்கள் மற்றும் சார்ஜ் ஏற்றும் நிலையங்களின் சரியான கட்டமைப்பு வரும் வரை எலெக்ட்ரிக் கார் அறிமுகத்தை ஒத்தி வைக்கப்படும்," என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியிலிருந்து ஜெய்ப்பூர் வரை சார்ஜ் பிரச்னை இல்லாமல் வாடிக்கையாளர்கள் பயணிக்கும் நிலை வரும்போது நிச்சயம் எங்களது எலெக்ட்ரிக் கார் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவோம் என்று தெரிவித்துள்ளார்.

பிஎம்டபிள்யூ நிறுவனத்திடம் பிஎம்டபிள்யூ ஐ3, பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்3 மற்றும் மினி எலெக்ட்ரிக் என மூன்று கார் மாடல்கள் கைவசம் உள்ளன. ஆனாால், அவற்றை இங்கு கொண்டு வந்தால், அதற்கான சந்தை வாய்ப்பு போதிய அளவு இருக்காது என்று பிஎம்டபிள்யூ கருதுகிறது.

மேலும், சார்ஜ் ஏற்றும் நிலையங்களின் கட்டமைப்பு சிறப்பாக இருந்தால் மட்டுமே வாடிக்கையாளர்கள் அச்சமின்றி வாங்க முற்படுவர். எனவே, இப்போதை நிலையில் வர்த்தக ரீதியில் சொகுசு எலெக்ட்ரிக் கார்களை கொண்டு வருவதில் நடைமுறை மற்றும் வர்த்தக ரீதியில் சிக்கல்கள் உள்ளதாக பிஎம்டபிள்யூ கருதுகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையை அதிகரிப்பதற்காக மத்திய அரசு ஃபேம் என்ற சிறப்பு மானியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தவிரவும், இதே ஃபேம் திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைகளில் 25 கிமீ தூரத்திற்கு ஒரு எலெக்ட்ரிக் கார் சார்ஜ் நிலையம் அமைக்கும் திட்டத்தையும் கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








