காரை புக் செய்ய டீலர்கள் போடும் புது ரூல்? அதை கட்டாயம் வாங்கியாக வேண்டுமாம்! இது புது கதையா இருக்கே
புதிய காரை புக் செய்ய டீலர்கள் சிலர் குறிப்பிட்ட ஒன்றை வாங்கியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

எதிர்பார்த்திராத அளவிற்கு மிகப்பெரிய டிமாண்டை மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யூவி கார் இந்தியாவில் பெற்று வருகின்றது. பன்முக தேர்வில் இக்கார் கிடைத்து வருகின்றது. இதில் குறிப்பிட்ட சில தேர்வுகளுக்கு இந்தியர்கள் மத்தியில் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்து வருகின்றது. ஆகையால், அவற்றின் மீதான காத்திருப்பு காலம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

இந்த சூழ்நிலையை டீலர்கள் சிலர் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். அதவாது, டிமாண்ட் நிலவும் கார்களுக்கான புக்கிங்கை செய்ய அக்ஸசெரீஸ்களைக் கட்டாயம் வாங்கியே ஆக வேண்டும் என வற்புறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் புதிய தார் காரை வாங்குவதற்காக டீலர்களை நாடும் வாடிக்கையாளர்கள் சிலர் நெருக்கடிக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

சமூக வலைதளம் மற்றும் இணையத்தின் வாயிலாக ஒரு சிலர் இந்த புகாரை முன் வைத்து வருகின்றனர். மஹிந்திரா தார் காருக்கான அக்ஸசெரீஸ்கள், அந்த காரைப் போலவே பன்முக தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 80 ஆயிரம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

இது மாதிரியான விலையுயர்ந்த அக்ஸசெரீஸ்களையே வாடிக்கையாளர்களை வாங்கும்படி டீலர்கள் சிலர் கட்டாயப்படுத்துவதாகக் கூறப்படுகின்றது. இந்த இக்கட்டான சூழ்நிலை மஹிந்திரா தார் காருக்கு மட்டுமே நிலவுவிதாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

அண்மையில் அறிமுகமான ஹூண்டாய் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை ஐ20 காரை புக் செய்ய விரும்புவோருக்கும் இதே நிலைதான் நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்காருக்கான கூடுதல் அக்ஸசெரீஸ்கள் ரூ. 20,000 முதல் ரூ. 50,000 வரையிலான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய அதிகபட்ச விலையுடைய அக்ஸசெரீஸ்களை சிலர் காரை ஆடம்பரமானதாகவும், கவர்ச்சியானதாகவும் மாற்றும் நோக்கில் வாங்கி பயன்படுத்துகின்றனர். அதேசமயம் பெரும்பாலானோர் இதனை தேவையற்ற செலவாகக் கருதி தவிர்க்கின்றனர். அத்தகையோரிடமும் கட்டாயப்படுத்தி கூடுதல் விலையுள்ள அகஸசெரீஸ்களை டீலர்கள் சிலர் விற்க முயற்சித்து வருகின்றனர்.

இதுபோன்று வாடிக்கையாளர்களைக் கட்டாயப்படுத்தி அக்ஸசெரீஸ்களை விற்பனைச் செய்யும் சம்பவம் இந்தியாவில் அரங்கேறுவது முதல் முறையல்ல. முன்னதாக, எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் காருக்கு டிமாண்ட் அதிகம் நிலவிய போதும், இதே சூழ்நிலைதான் காணப்பட்டது. தற்போது மஹிந்திரா தார் மற்றும் ஹூண்டாய் ஐ20 கார்களுக்கு இந்த நிலைக் காணப்படுகின்றது.

இந்தியாவில் பண்டிகைக் காலம் தொடங்கியிருப்பதால் புதிய வாகனங்களின் விற்பனைச் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முன்னதாக, கொரோனா வைரஸ் பரவலால் புதிய வாகனங்களின் விற்பனை அதலபாதாளத்தில் வீழ்ந்திருந்தது. இதற்கு தற்போதைய விழாக் காலமே கைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது.

தொடர்ந்து, வைரஸ் பரவல் காரணமாக மக்கள் பொது போக்குவரத்திற்கு தனி வாகனங்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். ஆகையால், வைரசின்மீது அச்சத்தின் காரணமாகவும் புதிய வாகனங்களின் விற்பனை அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த சூழ்நிலைகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டு வாகன விற்பனையாளர் முரண்பாடான செயல்படுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








