புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை வாங்க ஒற்றைக் காலில் நிற்கும் பிரபலங்கள்!
புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை வாங்குவதற்கு ஆவலோடு காத்திருப்பதாக பிரபலங்கள் பலர் தங்களது விருப்பதை தெரிவித்து வருகின்றனர். முன்பதிவு துவங்கியவுடன் புதிய தார் எஸ்யூவியை முன்பதிவு செய்ய பெரும் தள்ளுமுள்ளு இருக்கும் என்று தெரிகிறது.

டிசைனிலும், தொழில்நுட்ப அளவிலும் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்ட தார் எஸ்யூவி கடந்த சனிக்கிழமை பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. கண்டதும் காதல் கொள்ள செய்யும் வகையில் அமைந்துள்ள இதன் டிசைன் அனைத்து தரப்பு கார் பிரியர்களின் கவர்ந்து இழுத்துள்ளது.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் டிசைன், சொகுசு அம்சங்கள், ஆஃப்ரோடு தொழில்நுட்பங்கள், செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகளுடன் மிக சரியான விலையில் வர இருப்பது புதிய கார் வாங்க திட்டமிட்டிருப்போரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில், புதிய தார் எஸ்யூவியை வாங்குவதற்கு எஸ்யூவி பிரியர்கள் மட்டுமின்றி, பிரபலங்கள் பலரும் விருப்பம் தெரிவித்து ஆவலோடு காத்திருப்பதாக கூறி இருக்கின்றனர்.

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் பரபரப்பாக இயங்கி வருபவர். அவர் புதிய தார் குறித்த தனது ஆவலையும், ஒன்றை தனது கராஜிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஆனந்த் மஹிந்திராவிடம் தங்களுக்கும் ஒரு தார் எஸ்யூவி வேண்டும் என்று பிரபலங்களும், அவரை பின்தொடரும் எஸ்யூவி பிரியர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகை ரவீணா டான்டன்," எனக்கும் புதிய தார் எஸ்யூவியை முன்பதிவு செய்ய வேண்டும் என்று பொது வெளியில் விருப்பத்தை தெரிவித்துள்ளார். அவர் ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்து இந்த கோரிக்கையை முன் வைத்தார். இதற்கு பதில் அளித்துள்ள ஆனந்த் மஹிந்திரா, நிச்சயம் செய்யலாம். ஆனால், தார் எஸ்யூவிக்கு முன்பதிவு நீண்ட வரிசை முன்னால் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் க்ரிஸ் கோபாலகிருஷ்ணனும், புதிய தார் எஸ்யூவி பெரிதும் கவர்ந்து விட்டது என்று டிவிட்டி உள்ளார். இதற்கு ஆனந்த் மஹிந்திரா," உங்களை பெருமைப்படுத்தும் விதத்தில், இன்ஃபோ தார், தார் சிஸ் அல்லது தார் க்ரிஸ் ஆகிய பெயர் ஒன்றில் செல்லப் பெயருடன் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இந்த புதிய தார் வந்த உடனே வாங்குவதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ள க்ரிஸ் கோபாலகிருஷ்ணன், தார் க்ரிஸ் என்ற பெயருடன் வாங்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், புதிய தார் எஸ்யூவியை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு ஆட்டோமொபைல் துறை பத்திரிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. இதில், பலரும் புதிய தார் எஸ்யூவி அனைத்து விதத்திலும் சிறப்பானதாக குறிப்பிட்டுள்ளனர். அதில், சிலர் சொந்தமாக புதிய தார் எஸ்யூவியை வாங்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால், புதிய தார் எஸ்யூவி ஆஃப்ரோடு என்ற பிம்பத்தை உடைத்து, லைஃப் ஸ்டைல் மாடலாக வாடிக்கையாளர்களின் பலரின் வீடுகளை அலங்கரிக்கும் என்று கருதப்படுகிறது. இனி குடும்பத்தினருடன் செல்வதற்கு ஏற்ற ஒரு சிறந்த எஸ்யூவி மாடலாகவும் இருப்பதால், விற்பனையிலும் இது எதிரொலிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








