வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றம் தரும் புதிய கார்களுக்கான வெயிட்டிங் பீரியட்!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட சில புதிய கார் மாடல்களின் வெயிட்டிங் பீரியட் வாடிக்கையாளர்களுக்கு கடும் ஏமாற்றத்தை தருவதாக அமைந்துள்ளது.

இந்தியாவில் பண்டிகை காலத்தில் வாகன விற்பனை கன ஜோராக இருக்கும். நவராத்திரி, தந்திராஸ், தீபாவளி பண்டிகை நாட்களில் புதிய வாகனங்கள் வாங்குவது அதிர்ஷ்டத்தையும், செல்வ வளத்தை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இந்தியர்கள் மத்தியில் உள்ளது. இதனால், எப்போதுமே செப்டம்பர்-நவம்பர் இடையிலான காலக் கட்டத்தில் வாகன விற்பனை மிக அதிகமாக இருக்கும்.

இதனை மனதில் வைத்து புதிய கார், பைக் மாடல்களை அனைத்து நிறுவனங்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்வதும் வாடிக்கையான விஷயமாக உள்ளது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர்- நவம்பர் இடையிலான மாதங்களில் எதிர்பார்த்தபடியே பல புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

மேலும், கொரோனாவால் தாமதமான புதிய மாடல்கள் வரிசைகட்டின. அதேபோன்று, கொரோனா பிரச்னையால் கார் வாங்கும் திட்டத்தை தள்ளிப்போட்டிருந்த வாடிக்கையாளர்களும் கடந்த பண்டிகை காலத்தில் கார் வாங்கும் திட்டத்துடன் இருந்தனர்.

ஆனால், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சில கார்களுக்கு புக்கிங் அதிக அளவில் குவிந்ததால், இந்த கார்களை வாங்க காத்திருந்த பலரும் பல மாதங்கள் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், வேறு மாடல்கள் பக்கம் கவனத்தை திசை திருப்பும் நிலைக்கு சென்றுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கியா சொனெட் எஸ்யூவிக்கு 5 மாதங்கள் வரையிலும், அக்டோபரில் வந்த புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு 9 மாதங்கள் வரையிலும், கடந்த 2ந் தேதி அறிமுகம் செய்யப்பட்ட நிஸான் மேக்னைட் காருக்கு 5 மாதங்கள் வரையிலும் காத்திருப்பு காலம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கடும் சந்தைப் போட்டி நிலவும் இந்த சூழலில் மாற்றுத் தேர்வுகள் அதிகமாக உள்ளன. இந்த சூழலில், கியா சொனெட், புதிய மஹிந்திரா தார் மற்றும் நிஸான் மேக்னைட் கார்களுக்கான காத்திருப்பு காலம் ஏமாற்றத்தை தருவதாக அமைந்துள்ளது.

புக்கிங் அதிகமாக உள்ள மேற்கண்ட கார்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அதீத பிரயேத்னங்களை செய்து வந்தாலும், புக்கிங் தொடர்ந்து இருப்பதால், அதிகரித்த வண்ணமே உள்ளன. இதனால், காரை புக்கிங் செய்யும் ஆசையுடன் டீலர்களுக்கு படையெடுக்கும் வாடிக்கையாளர்களில் பலர் ஏமாற்றத்துடன் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், வரும் மாதங்களில் இந்த கார்களுக்கான காத்திருப்பு காலத்தை குறைப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முயற்சி எடுத்து வருவதால் குறிப்பிடத்தக்க அளவு குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அறிமுகம் செய்யப்படுவதற்கு முன் குறிப்பிட்ட அளவில் கார்களை உற்பத்தி செய்து இருப்பு வைத்து விற்பனைக்கு கொண்டு வருவது ஓரளவு இந்த பிரச்னையை தீர்க்க வழிவகுக்கும்.

புதிய கார்களுக்கு அதிகபட்சமாக 2 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் இருந்தால் மட்டுமே வர்த்தக அளவிலும், வாடிக்கையாளர்களின் ஆசையை உரிய நேரத்தில் நிறைவு செய்வதற்கு உண்டான பலன் கிட்டும். கார்களுக்கு அறிமுகத்திற்கு முன்னதாக கிடைக்கும் முன்பதிவு எண்ணிக்கை, விசாரணைகளை ஆராய்ந்து முன்கூட்டியே உற்பத்தியை அதிகரித்து வைத்துக் கொண்டு சந்தைப்படுத்தினால் அது நிச்சயம் வாடிக்கையாளர்களின் ஏமாற்றத்தை தவிர்க்க உதவும்.


Click it and Unblock the Notifications








