2021 டக்கார் ராலி புதிய வழித்தடம் மற்றும் முக்கிய தகவல்கள் வெளியீடு
உலக அளவில் மோட்டார் பந்தய ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ள இந்த ராலி பந்தயத்திற்கான புதிய வழித்தடம் வெளியிடப்பட்டுள்ளது.

உலகின் மிகவும் கடினமான மோட்டார் பந்தயங்களில் ஒன்றாக டக்கார் ராலி குறிப்பிடப்படுகிறது. பல்வேறு நிலப்பரப்புகளையும், கடினமான சீதோஷ்ண நிலைகளையும் பல நாட்கள் கடந்து வரும் வகையில் இந்த போட்டி அமைந்துள்ளது. வரும் ஆண்டும் சவூதி அரேபியா நாட்டில்தான் டக்கார் ராலி பந்தயம் நடக்க இருக்கிறது.

2021ம் ஆண்டு டக்கார் ராலி பந்தயம் மொத்தம் 7,646 கிலோமீட்டர் பந்தய தூரம் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 4,767 கிலோமீட்டர் தூரம் சிறப்பு பிரிவாக இருக்கும். இந்த பந்தயம் 12 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. 2020ம் ஆண்டு டக்கார் ராலி பந்தயத்தை ஒப்பிடும்போது 300 கிமீ தூரம் வரை மொத்த பந்தய தூரம் 2021ம் ஆண்டு டக்கார் ராலியில் குறைக்கப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி 3ந் தேதி சவூதி அரேபியாவில் உள்ள ஜெத்தா நகரில் துவங்கி, ஜனவரி 15ந் தேதி மீண்டும் ஜெத்தா நகரில் முடிவு பெறும் வகையில் இருக்கும். ரியாத் உள்ளிட்ட பல நகரங்கள் வாயிலாக இந்த போட்டி நடக்கக இருக்கிறது. ஜனவரி 9ந் தேதி மட்டும் ஓய்வு நாளாக இருக்கும்.

வரும் 2021ம் ஆண்டு டக்கார் ராலியில் அனைத்து ரகங்களை சேர்ந்த வாகனங்கள் பங்கு பெறும். மொத்தம் 295 வாகனங்கள் பங்கு கொள்ள இருக்கின்றன. கொரோனா காரணமாக, கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவாக வாகனங்கள் குறைவான அளவில் பங்கேற்க உள்ளன.

வரும் 2021ம் ஆண்டு டக்கார் ராலி பந்தயத்தில் 16 பெண்கள் உள்பட 501 பேர் பங்கு கொள்ள இருக்கின்றனர். வரும் 2021ம் ஆண்டு டக்கார் ராலி பந்தயத்தில் டக்கார் க்ளாசிக் என்ற சிறப்பு போட்டியும் நடக்க இருக்கிறது. 2000ம் ஆண்டிற்கு முன்னதாக நடந்த டக்கார் ராலி பந்தயங்களில் பங்கேற்ற வாகனங்கள் இந்த டக்கார் க்ளாசிக் ராலியில் பங்கு கொள்ள இருக்கின்றன.

2021ம் ஆண்டு டக்கார் ராலியில் 108 பைக்குகள், 21 க்வாட் வாகனங்கள், 124 கார்கள், 42 டிரக்குகள் மற்றும் சிறப்பு வடிவமைப்பு வாகனங்கள் போட்டி போட உள்ளன. டக்கார் க்ளாசிக் பந்தயத்தில் 26 வாகனங்கள் பங்கு கொள்ள இருக்கின்றன.

வரும் டக்கார் ராலி பந்தயத்தில் 4வது ஸ்டேஜ் பந்தயம்தான் மிக நீண்ட தூரத்திற்கான பந்தயமாக அமைய உள்ளது. வதி அத் தவசிர் முதல் ரியாத் வரையில் இந்த 4வது ஸ்டேஜ் போட்டி நடக்க இருக்கிறது. இந்த ஸ்டேஜ் 813 கிமீ தூரத்திற்கு நடக்க இருக்கிறது. இதில், 337 கிமீ தூரம் சிறப்பு பிரிவாக இருக்கும்.

மேலும், 11வது ஸ்டேஜ் போட்டி மிக கடினமானதாகவும், சவால்கள் அதிகம் நிறைந்ததாகவும் இருக்கும். இந்த போட்டி 557 கிமீ தூரத்திற்கு அமையும். இதில், 511 கிமீ தூரம் மிகவும் சிக்கலானதாக இருக்கும். யன்பு மற்றும் ஜெத்தா நகரங்களுக்கு இடையிலான போட்டி மிக குறுகிய தூரம் போட்டியாக இருக்கும்.

2021ம் ஆண்டு டக்கார் ராலி பந்தயத்தில் பங்கு கொள்ளும் அனைத்து வீரர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட வழக்கமான கொரோனா தடுப்பு வழிகாட்டு முறைகள் பின்பற்றப்படும்.

வரும் 2021ம் ஆண்டு டக்கார் ராலியில் இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களான ஹீரோ மோட்டோகார்ப், டிவிஎஸ் ஷெர்கோ ஆகிய அணிகள் பங்கு கொள்ள இருக்கின்றன. ஹீரோ மோட்டோகார்ப் சார்பில் இந்தியாவின் முன்னணி வீரர் சி.எஸ்.சந்தோஷ் மற்றும் டிவிஎஸ் ஷெர்கோ அணி சார்பில் ஹரித் நோவா ஆகியோர் பங்கு கொள்கின்றனர். தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஆசிஷ் ராவ்ரேன் பங்கு கொள்ள இருக்கிறார்.


Click it and Unblock the Notifications








