கொள்ளை அழகு... புதிய அவதாரத்தில் அம்பாஸிடர் மீண்டும் விற்பனைக்கு வருவது உறுதி! விலை எவ்ளோ தெரியுமா?
இந்திய சாலைகளின் அரசனான அம்பாஸிடர் கார், புதிய அவதாரத்தில் மீண்டும் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றுதான் என்னதான் அதிநவீன கார்கள் வந்து விட்டாலும் கூட, இந்தியர்கள் மனதில் என்றென்றும் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் கார்களில் மிகவும் முக்கியமானது ஹிந்துஸ்தான் அம்பாஸிடர். ஒரு காலத்தில் இந்திய சாலைகளை ஆண்ட அரசன் அது. ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் செடான் ரக கார் ஆகும். சுமார் 6 தசாப்தங்களாக ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் உற்பத்தியில் இருந்தது.

அதாவது கிட்டத்தட்ட 60 ஆண்டுகள். இதன் மூலம் இந்தியாவில் மிக நீண்ட காலம் உற்பத்தியில் இருந்த கார் என்ற பெருமையையும் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் பெறுகிறது. சுதந்திரத்திற்கு பிறகு இந்திய தேசத்தில் ஆட்டோமொபைல் கலாச்சாரத்தை தொடங்கிய கார் என்ற பெருமையும் ஹிந்துஸ்தான் அம்பாஸிடரை சேரும்.

அம்பாஸிடர் என்ற 'பிராண்டு நேம்', பிரான்ஸை சேர்ந்த பியூஜியோட் (Peugeot) நிறுவனத்தால் தற்போது வாங்கப்பட்டு விட்டது. இதன் காரணமாக எதிர்காலத்தில் அம்பாஸிடர் கார், இந்திய சந்தையில் 'கம் பேக்' கொடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படி ஒரு நாளுக்காக இந்தியர்கள் தவம் கிடந்து வருகின்றனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இதற்கிடையே இந்தியாவை சேர்ந்த முன்னணி கார் டிசைன் நிறுவனமான டிசி2 (DC2), அம்பாஸிடர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டு வருகிறது. இந்த கார் இ-ஆம்பி (e-Amby) என அழைக்கப்படலாம். இதற்கு முன்னர் டிசி டிசைன்ஸ் (DC designs) என அறியப்பட்ட நிறுவனம்தான் தற்போது டிசி2 என மாறியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அம்பாஸிடர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனுடைய டிஜிட்டல் ரெண்டர் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது. இதைப்பார்த்த இந்திய மக்கள் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமா? என ஏங்கி கிடந்தனர். அப்படி தவமாய் தவம் கிடந்தவர்களுக்கு உற்சாகம் அளிக்க கூடிய செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஆம், இந்த காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதை டிசி2 நிறுவனம் உறுதி செய்துள்ளதாக ஓவர்டிரைவ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள இ-ஆம்பி மாடல், அம்பாஸிடர் காரின் சாராம்சத்தை தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும் என டிசி2 நிறுவனம் விரும்புவதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் தற்போதைய நவ நாகரீக கால கட்டத்திற்கு ஏற்ப அட்வான்ஸ்டு வசதிகளையும் வழங்க டிசி2 நிறுவனம் விரும்புவதாக தெரிகிறது. இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள இ-ஆம்பி காரில், கல்விங் டோர் (Gullwing Door) வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆட்டோமொபைல் துறையில், கார் கதவின் ஒரு வகைதான் இது.

அதாவது இந்த கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் காரை பார்த்தால், சிறகு விரிந்த பறவை போல் தோற்றம் அளிக்கும். ஒரு சில கோணங்களில் இருந்து பார்த்தால், இந்த இ-ஆம்பி உங்களுக்கு அம்பாஸிடர் காரை நியாபகப்படுத்தலாம். ஆனால் அம்பாஸிடருடன் ஒப்பிடுகையில், முற்றிலும் மாறுபட்டதாக இ-ஆம்பி இருக்கும்.

ரெகுலர் அம்பாஸிடர் காருடன் ஒப்பிடும்போது அம்பாஸிடரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் 200 மிமீ நீளமாகவும், 100 மிமீ அகலமாகவும், 50 மிமீ உயரமாகவும் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இ-ஆம்பி காரில், என்னென்ன வசதிகள் வழங்கப்படும் என்பது பற்றிய சரியான தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

எனினும் 160 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 190 முதல் 200 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் பேட்டரியை முழுமையாக நிரப்புவதற்கு 5-6 மணி நேரம் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன் வழங்கப்படுவதும் சந்தேகமாகதான் உள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன் இல்லாவிட்டால், அது ஒரு பின்னடைவாகவே இருக்கும். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்டுவதற்கு இந்த இ-ஆம்பி, வெறும் 4-5.5 வினாடிகள் வரையே எடுத்து கொள்ளும் என கூறப்படுகிறது.

இந்தியா தவிர அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கும், இந்த காரை விற்பனை செய்வதற்கு டிசி2 நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த காரை நீங்கள் வாங்க முடிவு செய்தால், இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும். ஏனெனில் இ-ஆம்பி காரின் தயாரிப்பு நிலை வெர்ஷன், வரும் 2022ம் ஆண்டில்தான் மார்க்கெட்டிற்கு வரும் என கூறப்படுகிறது.

இ-ஆம்பி காரின் விலை ரூ.40-45 லட்சம் என்ற நிலையில் நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எக்ஸ்ஷோரூம் விலையாக இருக்கலாம். இ-ஆம்பி கார் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்தால், வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பை பெறும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் விலை நிர்ணயம் சரியாக இருக்க வேண்டும்.

ஹிந்துஸ்தான் அம்பாஸிடரை போல், இந்தியர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கும் மற்றொரு கார் மாருதி 800. கடந்த 1983ம் ஆண்டு தொடங்கப்பட்ட மாருதி 800 காரின் உற்பத்தி, 2014ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதாவது 31 ஆண்டுகள் உற்பத்தியில் இருந்தது. இந்தியர்கள் பலரின் முதல் கார் அனேகமாக மாருதி 800-ஆகதான் இருக்கும்.

மாருதி 800 காரும் புதிய அவதாரத்தில் இந்திய மார்க்கெட்டில் மீண்டும் விற்பனைக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்தியர்கள் பலரிடம் காணப்படுகிறது. ஆனால் மாருதி சுஸுகி நிறுவனத்திடம், அத்தகைய திட்டங்கள் எதுவும் இருக்கிறதா? என்பது உறுதியாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications








