விண்டேஜ் லுக்கில் எலெக்ட்ரிக் காரை உருவாக்கிய மெக்கானிக்... எவ்ளோ செலவு ஆச்சு தெரியுமா? ரொம்ப கம்மி
மெக்கானிக் ஒருவர் விண்டேஜ் தோற்றத்தில் மின்சார கார் ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார்.

தலைநகர் டெல்லி உள்பட இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள்தான் முக்கியமான காரணம். எனவே பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக, இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், காற்று மாசுபாடு பிரச்னை ஓரளவிற்கு கட்டுக்குள் வரும். இதனால்தான் மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகம் ஊக்குவித்து வருகின்றன. ஆனால் மின்சார வாகனங்களுக்கு மாற பல்வேறு காரணங்களால், பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இருந்தாலும் சுற்றுச்சூழல் மீது அக்கறை உடையவர்கள், மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இதில், பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்டர் நகரை சேர்ந்த டேனிஷ் தல்வாரின் குடும்பமும் ஒன்று. கொரோனா வைரஸ் ஊரடங்கு தீவிரமாக அமலில் இருந்த கட்டத்தில், மாசுபாடு இல்லாத காற்றை அவர்கள் சுவாசித்தனர். அப்போது வாகன பயன்பாடு குறைந்திருந்ததால், காற்றின் தரம் மேம்பட்டிருந்தது.

எனினும் ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் வாகன போக்குவரத்து அதிகரித்து விட்டதால், மீண்டும் காற்றின் தரம் குறைந்து வருகிறது. முன்னதாக ஊரடங்கு தீவிரமாக இருந்த சமயத்தில் சுத்தமான காற்றை சுவாசித்ததால், பேட்டரியில் இயங்க கூடிய மின்சார வாகனம் ஒன்று வேண்டும் என டேனிஷ் தல்வாரின் குடும்பம் விரும்பியது.

ஆனால் அந்த மின்சார வாகனம் விண்டேஜ் தோற்றத்தில் இருக்க வேண்டும் என்பது டேனிஷ் தல்வாருடைய குடும்பத்தின் எண்ணம். அவர்களுக்காக மெக்கானிக் ஒருவர், மின்சார ரிக்ஸா ஒன்றை, விண்டேஜ் காராக மாற்றி கொடுத்துள்ளார். ஜஸ்பீர் சிங் போலா என்னும் மெக்கானிக்தான் டேனிஷ் தல்வாரின் குடும்பத்திற்காக விண்டேஜ் தோற்றத்தில் இந்த மின்சார காரை உருவாக்கியுள்ளார்.

ஜஸ்பீர் சிங் போலா, அவரது வெல்டர் நிஸ்ஸான் சிங் மற்றும் அவரது மகன்கள் ஜஸ்ஜித் சிங், இந்திரஜித் சிங் ஆகியோரின் கூட்டு முயற்சியில், மின்சாரத்தில் இயங்க கூடிய இந்த கார் உருவாகியுள்ளது. பார்ப்பதற்கு அப்படியே விண்டேஜ் காரின் தோற்றத்தில் இது உள்ளது. அம்ரிஸ்டர் நகரில் சிறிய ஆட்டோமொபைல் ஒர்க்ஸாப் ஒன்றை ஜஸ்பீர் சிங் போலா நடத்தி வருகிறார்.

அங்கு உருவாக்கப்பட்ட மூன்றாவது மின்சார கார் இதுவாகும். இதற்கு முன்பாக பிஎம் சிங் என்பவருக்காவும், பஞ்சாப் மாநிலம் டரன் டரன் சாஹிப் நகரை சேர்ந்த ஒரு கமிஷன் ஏஜெண்ட்டிற்காகவும், இது போன்ற கார்களை ஜஸ்பீர் சிங் போலா உருவாக்கி தந்துள்ளார். மின்சார ரிக்ஸாவின் கொள்கையின் அடிப்படையில்தான் இந்த மின்சார காரும் இயங்கும் என அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஜஸ்பீர் சிங் போலா கூறுகையில், ''தலா 12 வோல்ட் திறன் கொண்ட நான்கு பேட்டரிகள் இந்த மின்சார காரில் வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் இந்த காரில் இருக்கைகளை பொருத்தியுள்ளோம். அத்துடன் மோட்டார்சைக்கிள் டயர்களை பயன்படுத்தியுள்ளோம்'' என்றார். இந்த மின்சார கார் நான்கு பேருடன் அதிகபட்சமாக மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்க கூடியது.

இந்த மின்சார காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை ஆகும். முழுமையாக சார்ஜ் நிரப்பினால், 80 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும். விண்டேஜ் தோற்றத்தில் இந்த மின்சார காரை உருவாக்குவதற்கு ஒட்டுமொத்தமாக வெறும் 1.50 லட்ச ரூபாய் மட்டும்தான் செலவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விலைக்கு விண்டேஜ் தோற்றத்தில் ஒரு மின்சார கார் கிடைப்பது என்பது உண்மையில் அருமையான விஷயம்தான். இது தொடர்பாக ட்ரைபூன் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது தற்போது மின்சார கார்கள் மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. எனவே வருங்காலத்தில் சாலைகளில் அதிக மின்சார கார்களை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








