கார்களை போல பஸ், டிரக்குகளில் கனெக்டெட் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் ஐஷர் நிறுவனம்!
கார்களில் வழங்கப்படுவது போன்று பஸ், டிரக்குகளிலும் நேரடி இணைய வசதியை அளிக்கும் கனெக்டெட் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது வால்வோ- ஐஷர் வர்த்தக வாகன நிறுவனம். இந்தியாவில் முதல்முறையாக பஸ், டிரக்குகளில் அறிமுகமாக இருக்கும் இந்த தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்கள் குறித்த விபரங்களை தொடர்ந்து காணலாம்.

தொழில்நுட்பத் துறை வளர்ச்சி வாகன போக்குவரத்திலும், பயன்பாட்டிலும் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, கார்களில் தற்போது வழங்கப்படும் கனெக்டெட் கார் என்ற நேரடி இணைய வசதி மூலமாக ஸ்மார்ட்ஃபோனை இணைத்துக் கொண்டு பல்வேறு கட்டுப்பாட்டு வசதிகளையும், தரவுகளையும் பெறும் திட்டம் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. சொகுசு கார்களில் இருந்த இந்த தொழில்நுட்பம், தற்போது பட்ஜெட் கார்களில் கூட வந்துவிட்டது.

இதே தொழில்நுட்பத்தை தனது புதிய பஸ், டிரக்குகளில் வழங்க இருப்பதாக வால்வோ- ஐஷர் கூட்டணி நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 1 முதல் உற்பத்தி செய்யப்பட இருக்கும் தனது பஸ், டிரக்குகளில் இந்த கனெக்டெட் தொழில்நுட்ப வசதியை கொண்டதாக இருக்கும் என்று வால்வோ- ஐஷர் நிறுவனம் அறிவித்துள்ளது.

வால்வோ- ஐஷர் கூட்டணியின் யூரோடெக்-6 என்ற பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் அனைத்து பஸ், டிரக்குகளிலும் இந்த கனெக்டெட் வசதி கொடுக்கப்பட்டு இருக்கும். இதற்கான சாதனம் ஆலையில் உற்பத்தி செய்யப்படும்போதே, இந்த வாகனங்களில் பொருத்தப்பட்டுவிடும்.

இந்த சாதனங்களில் இடம்பெறும் இ-சிம்கார்டு மூலமாக நேரடி இணைய வசதியை பெறும். இதன்மூலமாக, வாகனத்தின் உரிமையாளர், சர்வீஸ் சென்டருடன் நேரடி தொடர்பில் வாகனம் இருக்கும். வாகனம் எங்கு இருக்கிறது, வாகனத்தில் ஏதேனும் தொழில்நுட்ப பிரச்னை உள்ளதா, ஓட்டுனர் எவ்வாறு வாகனத்தை ஓட்டுகிறார் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக பெற முடியும்.

இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக வாகனத்தின் இயக்கத்தில் உள்ள கோளாறுகளை கண்டறிந்து உடனடியாக சரிசெய்வதற்கான வாய்ப்பை பெற முடியும். அதேபோன்று, ஓட்டும் முறையை வைத்தும், அதனை சரிசெய்தால் எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பையும் இந்த தொழில்நுட்பம் தரும்.

குறிப்பாக, அதிக வாகனங்களை வைத்து இயக்கும் நிறுவனங்களுக்கு இந்த தொழில்நுட்பம் வரப்பிரசாதமாக அமையும். ஒவ்வொரு வாகனம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை இருந்த இடத்தில் இருந்தே துல்லியமாக தெரிந்து கொள்வதற்கும், பழுது குறித்த தகவல்களையும் எளிதாக பெறும் வாய்ப்பை வழங்கும். ஓட்டுனரின் ஓட்டும் முறையை கண்டறிந்து அதனை சரிசெய்வதற்கான வழிமுறைகளையும் இந்த தொழில்நுட்பம் தரும்.

வரும் 1ந் தேதி முதல் பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக உற்பத்தி செய்யப்படும் தனது பஸ், டிரக்குகளில் இந்த சாதனத்தையும் சேர்க்க இருப்பதாக வால்வோ- ஐஷர் நிறுவனம் தெரிவித்துள்ளது. வால்வோ- ஐஷர் கூட்டணியில் தயாரிக்கப்படும் 4.9 டன் முதல் 55 டன் வரையிலான திறன் கொண்ட டிரக்குகள் மற்றும் பஸ் மாடல்களில் இந்த சாதனம் பொருத்தப்படும். மேலும், முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த தொழில்நுட்ப வசதியை இலவசமாக தருவதற்கும் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பத்திற்காக தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கான முயற்சிகளிலும் வால்வோ- ஐஷர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் இந்திய கனரக வாகன போக்குவரத்துத் துறைக்கு புதிய அத்யாயத்தை எழுதுவதற்கான முயற்சியாக அமையும்.


Click it and Unblock the Notifications








