இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம்...
முடிவுக்கு வந்துள்ள 2019-20 பொருளாதார ஆண்டில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை இந்தியாவில் சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனை விரிவாக இந்த செய்தியில் இனி பார்ப்போம்.

இதுகுறித்து மின்சார வாகனங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பொருளாதார ஆண்டில் மொத்தம் 1,56,000 யூனிட் எலக்ட்ரிக் வாகனங்கள் இந்திய சந்தையில் விற்பனையாகியுள்ளன. இதில் 1,52,000 இரு சக்கர வாகனங்களும், 3,400 கார்கள் மற்றும் 600 பேருந்துகள் அடங்கும்.

இதுவே 2018-19 பொருளாதார ஆண்டில் 1,26,000 இருசக்கர வாகனங்கள், 3,600 கார்கள் மற்றும் 400 பேருந்துகள் என மொத்தம் 1,30,000 எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை தான் சந்தையில் பதிவாகி இருந்தது. இந்த எண்ணிக்கை 2019-20 ஆண்டை விட 20 சதவீதம் குறைவாகும்.

இதிலிருந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக வரவேற்பை பெற்று வருவது தெரிய வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களின் இத்தகைய வளர்ச்சிக்கு இவி மோட்டார்சைக்கிள்களின் பங்கு இன்றியமையாதது. இந்த எலக்ட்ரிக் வாகனங்களில் இ-ரிக்ஷாக்கள் சேர்க்கப்படவில்லை.

ஏனெனில் இந்தியாவில் இ-ரிக்ஷாக்களை பெரும்பாலும் அமைப்புசாரா நிறுவனங்கள் தான் விற்பனை செய்து வருகின்றன. இதனால் இ-ரிக்ஷாக்களின் விற்பனை எண்ணிக்கை குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் கடந்த 2018-19 பொருளாதார ஆண்டிலும் வெளியிடப்படவில்லை.

இருப்பினும் 2019-20 ஆண்டில் கிட்டத்தட்ட 90,000 இ-ரிக்ஷாக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எலக்ட்ரிக் இருசக்கரங்களின் விற்பனையை பொறுத்தவரையில், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தான் கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையாகியுள்ளன.

மொத்த இவி மோட்டார்சைக்கிள்கள் விற்பனையில் 97 சதவீதத்தை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களே பெற்றுள்ளதால், மீதி 3% மட்டுமே எலக்ட்ரிக் பைக்குகள் மற்றும் எலக்ட்ரிக் சைக்கிள்கள் விற்பனையாகியுள்ளன. ஏனெனில் குறைவான வேகத்தில் செயல்படக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அதிகப்பட்ச வேகமே சராசரியாக 25 kmph என்ற அளவில் தான் உள்ளதால் இவற்றை போக்குவரத்து அலுவலங்களில் பதிவு செய்ய தேவையில்லை.

இதன் காரணமாகவே 90 சதவீதத்தினர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். எலக்ட்ரிக் 4-சக்கரங்களின் விற்பனை இதற்கு முந்தைய பொருளாதார ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019-20 நிதியாண்டில் 200 யூனிட்கள் குறைந்துள்ளது.

இந்த விற்பனை குறைவுக்கு எலக்ட்ரிக் கார்கள் எதுவும் இந்த காலக்கட்டத்தில் பெரிய அளவில் மொத்த கொள்முதல் செய்யப்படாததும், முக்கியமான கார் மாடல்களின் விற்பனை இந்திய சந்தையில் நிறுத்தப்பட்டதும் தான் காரணங்களாக உள்ளன.

ஆனால் ப்ரீமியம் பிரிவில் உள்ள எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான வாடிக்கையாளர்களின் கவனம் வெகுவாக அதிகரித்துள்ளதால் 2020-21 பொருளாதார ஆண்டில் எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்தகைய எலக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்வதற்கு நாடு முழுவதும் சார்ஜிங் நிலையங்களை ஏற்படுத்தினால் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

இ-பேருந்துகளின் விற்பனையை எப்போதும் போல இந்த முறையும் மாநில அரசாங்கங்களே நிவர்த்தி செய்துள்ளன. மற்றப்படி தனியார் பயன்பாட்டிற்காக எந்தவொரு எலக்ட்ரிக் பேருந்தும் விற்கப்பட்டதாக தகவல் இல்லை.

கொரோனா வைரஸினால் எலக்ட்ரிக் வாகனங்களின் சந்தை நல்ல வடிவத்தை பெற்றிருப்பதாகவும், இதனால் 2020-21 நிதியாண்டு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சிறப்பாக இருக்கும் என்று மின்சார வாகனங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இயக்குனர் சோகிந்தர் கில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








