இனி வாகனங்களில் E20, E85, E95 போன்ற குறியீடுகள் இருக்கும்... இதற்கு என்ன அர்த்தம்னு யாரும் சொல்ல மாட்டாங்க...
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வாகனங்களில் இனி E20, E85, E95 மற்றும் E100 போன்ற அடையாள குறியீடுகள் இருக்கும். இது எதற்காக? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

உலகின் பல்வேறு நாடுகள் தற்போது பெட்ரோலுடன் எத்தனாலை (Ethanol) கலந்து, வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தி வருகின்றன. இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும் என்பதுடன், கச்சா எண்ணெய் இறக்குமதியையும் குறைக்கலாம். எத்தனால் உற்பத்தி மற்றும் அதனை எரிபொருளாக பயன்படுத்துவதில் பிரேசில் உலகிற்கே முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

இந்தியாவிலும் தற்போது எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல்தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரும் 2022ம் ஆண்டிற்குள் பெட்ரோலுடன் 10 சதவீதம் எத்தனால் கலக்கப்பட வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த இலக்கை இந்தியா இன்னும் எட்டவில்லை. தற்போதைய நிலையில் 5.6 சதவீதம் என்ற அளவில் மட்டும்தான் பெட்ரோலுடன் எத்தனால் கலக்கப்பட்டு வருகிறது.

ஆனால் ஒரு சில மாநிலங்களில் மட்டும் பெட்ரோலுடன் 9.5 சதவீத எத்தனால் கலக்கப்படுகிறது. இந்த சூழலில், 2022ம் ஆண்டிற்குள் 10 சதவீத எத்தனால் கலப்பு என்ற இலக்கிற்கு பதிலாக நேரடியாக 20 சதவீத எத்தனால் கலப்பு என்ற இலக்கை அடைய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுவும் குறுகிய காலத்திற்குள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது 2022ம் ஆண்டிற்குள் பெட்ரோலுடன் 10 சதவீதம் எத்தனால் கலக்கப்பட வேண்டும் எனவும், அதற்கு அடுத்தபடியாக 2030ம் ஆண்டிற்குள் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட வேண்டும் எனவும்தான் மத்திய அரசு முதலில் இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. ஆனால் தற்போது நேரடியாக 20 சதவீத எத்தனால் கலப்பு என்ற இலக்கை அடைவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அத்துடன் இதற்கான காலக்கெடு 2030ம் ஆண்டிற்கு பதிலாக, 2023 அல்லது 2025ம் ஆண்டிற்கு மாற்றப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது பெட்ரோலுடன் அதிக அளவு எத்தனால் கலப்பதை வேகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதவிர எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு தனி அடையாள குறியீட்டை வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி சிஎன்ஜி மற்றும் ஹைட்ரஜன் வாகனங்களை போன்று, 20 சதவீதம் அல்லது அதற்கும் மேற்பட்ட அளவு எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலில் இயங்கும் வாகனங்களும் தனி அடையாள குறியீட்டை பெறவுள்ளன. ஆனால் E10, E12 மற்றும் E15 ஆகிய எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களுக்கு தனி அடையாள குறியீடு இருக்காது என கூறப்படுகிறது.

E10, E12 மற்றும் E15 எரிபொருட்கள் என்றால் என்ன? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். இது பெட்ரோலுடன் கலக்கப்படும் எத்தனாலின் அளவை குறிக்கிறது. உதாரணத்திற்கு E10 எரிபொருளில் 10 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்டிருக்கும். மீதி 90 சதவீதம் பெட்ரோல் ஆகும். E12 எரிபொருளில் 12 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்டிருக்கும். மீதி 88 சதவீதம் பெட்ரோல் ஆகும்.

ஆனால் 20 சதவீதம், 85 சதவீதம் மற்றும் 95 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலில் இயங்கும் வாகனங்களும், 100 சதவீத தூய எத்தனாலில் இயங்கும் வாகனங்களும் E20, E85, E95 மற்றும் E100 போன்ற அடையாள குறியீடுகளை பெறவுள்ளன. பிரேசில் போன்ற நாடுகள் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவதில் வெற்றி கண்டுள்ள நிலையில், இந்தியாவும் அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளது.

உலகிலேயே கச்சா எண்ணெய்யை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருவதும், இதன் காரணமாக பொருளாதார ரீதியில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதும் நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். எனவே எத்தனால் போன்ற மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








