நாட்டின் முதல் ரெட்ரோஃபிட்டட் மின்சார சரக்கு வாகனம்! இதோட விலை எவ்வளவுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
நாட்டின் முதல் ரெட்ரோஃபிட்டட் மின்சார வாகனத்தை எட்ரியோ நிறுவனம் அறிமுகம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்சாரம் சார்ந்த உபகரணங்கள் மற்றும் வாகனங்களைத் தயாரித்து வரும் ஆரம்பநிலை நிறுவனமான எட்ரியோ (Etrio), நாட்டிலேயே முதல் முறையாக ரெட்ரோஃபிட்டட் மின்சார வாகனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது ஓர் இலகு ரக கமர்சியல் (eLCV) வாகனம் ஆகும்.

அதாவது, டாடா ஏஸ் போன்று வர்த்தக ரீதியில் பயன்படுத்தக்கூடிய லோடு வண்டியாகும். இம்மாதிரியான வாகனத்தைத்தான் எட்ரியோ நிறுவனம் நேற்று (செவ்வாய் கிழமை) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதற்கு விலையாக ரூ. 7.75 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

அண்மைக் காலங்களாக இந்தியாவில் மின் வாகன தேவை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அதிக லாபம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு மக்கள் தங்களின் பார்வையை மின் வாகனம் பக்கம் மாற்றி வருகின்றனர்.

எனவேதான், பயணிகள் வாகனம் முதல் வர்த்தக ரீதியாக இயங்கும் வாகனங்கள் வரை அனைத்து மாடல்களிலும் மின் வாகனங்களை வாகன உற்பத்தி நிறுவனங்கள் களமிறக்கி வருகின்றன. தற்போது அறிமுகமாகி உள்ள எட்ரியோ இஎல்சிவி வாகனம்கூட சரக்கு மற்றும் வர்த்தகத்தை மையமாக மட்டுமே கொண்டு இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் 20 kWh திறனுடைய லித்தியம் அயன் பேட்டரி சேர்க்கப்பட்டுள்ளது. இத்துடன், 96வோல்ட் உயர் மின்னழுத்தத்தை வழங்கும் தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

மேலும், இந்த வாகனத்தில் 15kW திறனுடைய மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது, அதிகபட்சமாக 120 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இது 7 டிகிரி சாய்ந்த கோணத்தில் இருக்கும் பாதையைகூட எளிதில் கடக்க உதவும். இத்தகைய சிறப்பு வாய்ந்த மின்சார கமர்சியல் வாகனத்தையே எட்ரியோ நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்தது.

இதன் தயாரிப்புப் பணிகள் சோதனையின் அடிப்படையில் தொடங்கப்பட்டிருப்பதால் வருடம் ஒன்றிற்கு 5 ஆயிரம் யூனிட்டுகளை மட்டுமே உற்பத்திச் செய்ய எட்ரியோ திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த வாகனத்தின் மீதிருக்கும் அதிக ஆர்வத்தின் காரணமாக வாடிக்கையாளர்கள் இப்போதே இதன் பக்கம் குவிய ஆரம்பித்திருக்கின்றனர்.

ஆம், ஏற்கனவே இந்த வாகனத்திற்கு 1,200க்கும் அதிகமானோர் வாங்குவதற்கான விருப்பத்தைத் தெரிவித்திருப்பதாக எட்ரியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனத்தின் சிஇஏ மற்றும் இணை இயக்குநரான தீபக் எம்வி, கூறியதாவது, "ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் இருவருக்கும் எட்ரியோ இஎல்சிவி அதிக லாபத்தை வழங்கும். இது, எரிபொருளால் ஏற்படும் செலவீணத்தைக் குறைத்து 60 சதவீதம் வரை லாபம் ஈட்டி தரும்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "வர்த்தகத்துறையின் வாகன உலகத்தை மாற்றியமைக்கும் விதமாக ரெட்ரோஃபிட் செய்யப்பட்ட எட்ரியோ அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகவும்" அவர் பெருமிதம் சேர்த்தார்.
ரெட்ரோஃபிட் முறை மூலம் வாகனத்தை மின்சார வாகனமாக மாற்றம் செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதனைக் கூடுதல் தொழில்நுட்பங்கள் அடங்கிய வாகனமாகவும் எட்ரியோ நிறுவனம் மாற்றியமைக்கின்றது.

இதன்படி எட்ரியோ டிராக், டெலிமேடிக் ஆப், ஜியோ ஃபென்சிங், ரிமோட் இம்மொபிலிசேஷன் போன்ற பிரமாண்ட தொழில்நுட்ப வசதிகள் அதில் சேர்க்கப்பட இருக்கின்றன. ஆகையால், இந்த புதுமுக மின்சார சரக்கு வாகனத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








