ஹைதராபாத்தில் பிரம்மாண்ட தொழில்நுட்ப மையத்தை திறக்கும் ஃபியட் க்றைஸ்லர் குழுமம்!
உலகின் மிகப்பெரிய வாகன குழுமங்களில் ஒன்றாக இருந்து வரும் ஃபியட் க்றைஸ்லர் குழுமம் தனது புதிய தொழில்நுட்ப மையத்தை ஹைதராபாத்தில் நிறுவுவதற்கு முடிவு செய்துள்ளது.

கார்களில் தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்கு அனைத்து நிறுவனங்களும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், ஃபியட் க்றைஸ்லர் குழுமம் தனது கார்களுக்கான மின்னணு தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஃபியட், க்றைஸ்லர், ஜீப், மஸேரட்டி உள்ளிட்ட பிராண்டுகள் இந்த குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. உலக அளவில் ஃபியட் க்றைஸ்லர் குழுமம் 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளையும், 40க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களையும் செயல்பாட்டில் வைத்துள்ளது.

ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் பொறியியல் மேம்பாட்டு மையங்கள் சென்னை மற்றும் புனே நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் 1,500 பொறியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, கார்களுக்கான மின்னணு தொழில்நுட்பத்தை உருவாக்கும் புதிய தொழில்நுட்ப மையத்தை ஹைதராபாத் நகரில் அமைக்க ஃபியட் க்றைஸ்லர் குழுமம் திட்டமிட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தள செய்தி தெரிவிக்கிறது.

இந்த புதிய தகவல் தொழில்நுட்ப மையத்தில் 2,000 பொறியாளர்கள் பணிபுரியும் வசதியை பெற்றிருக்கும். 1999ம் ஆண்டு ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தில் பணியில் சேர்ந்த இந்தியரான கரீம் லலானி இந்த புதிய தொழில்நுட்ப மையத்தின் தலைமை அதிகாரியாக பணிபுரிய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மும்பை பல்கலைகழகத்தில் எலெக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங் துறையில் பட்டம் பெற்றவர்.

ஹைதராபாத் நகரின் ராய்துர்க் பகுதியில் உள்ள சலர்புரியா நாலேட்ஜ் மையத்தில் ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் புதிய தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் செயல்பட உள்ளது. இந்த மாத இறுதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், ஃபியட் க்றைஸ்லர் குழுமத்திடம் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்தியாவில் சிறந்த தகவல் தொழில்நுட்ப பொறியாளர்கள் இருந்து வருவதால், கார் நிறுவனங்கள் தங்களது தகவல் தொழில்நுட்ப மையங்களை இந்தியாவில் திறந்து வருகின்றன.

ஏற்கனவே, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப மையம் பெங்களூர் நகரிலும், ஹூண்டாய் ஆராய்ச்சி மையம் ஹைதராபாத் நகரத்திலும், ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப மையம் மானேசர் நகரிலும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








