ஹைதராபாத்தில் கார்களுக்கான மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மையத்தை நிறுவும் ஃபியட் க்றைஸ்லர்!
ஹைதராபாத்தில் ரூ.1,100 கோடி முதலீட்டில் கார்களுக்கான புதிய தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தை நிறுவ உள்ளதாக ஃபியட் க்றைஸ்லர் குழுமம் அறிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய வாகன குழுமங்களில் ஒன்றாக ஃபியட் க்றைஸ்லர் செயல்பட்டு வருகிறது. ஃபியட், க்றைஸ்லர், மஸேரட்டி, ஜீப் உள்ளிட்ட பல பிரபலமான கார் பிராண்டுகள் ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், எதிர்காலத்தில் தனது கார்களுக்கான மென்பொருள் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காக பிரம்மாண்ட தொழில்நுட்ப மையத்தை ஹைதராபாத் நகரில் அமைக்க உள்ளது.

இந்த புதிய தகவல் தொழில்நுட்ப மையம் ரூ.1,100 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது. ஃபியட் க்றைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் குளோபல் டிஜிட்டல் ஹப் என்ற பெயரில் இந்த புதிய தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் திறக்கப்பட உள்ளது.

அடுத்த ஆண்டு இறுதியில் இந்த புதிய தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. இந்த புதிய தகவல் தொழில்நுட்ப மையத்தில் 1,000 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்.

ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் கார்களுக்கான கனெக்டெட் கார் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உருவாக்கம், தகவல் சேமிப்புச் சேவைகளை இந்த தொழில்நுட்ப மையம் கையாளும்.

ஹைதராபாத் நகரில் சிறந்த தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அரசு வழங்கும் சாதகமான கொள்கை திட்டங்களை மனதில் வைத்து இந்த புதிய தொழில்நுட்ப மையத்தை அமைக்க முடிவு செய்ததற்கான காரணங்களாக ஃபியட் க்றைஸ்லர் குழமம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக புதிய ஸ்டார்ட் அப் தொழில்நுட்ப நிறுவனங்கள், பல்கலைகழங்களுடன் இணைந்து செயலாற்றவும் திட்டமிட்டுள்ளதாக ஃபியட் க்றைஸ்லர் தெரிவித்துள்ளது.

ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் பொறியியல் மற்றும் கார் உருவாக்க தொழில்நுட்ப மையங்கள் சென்னை மற்றும் புனே நகரில் செயல்பட்டு வருகின்றன. ரஞ்சன்கவுன் நகரில் வாகன உற்பத்தி மற்றும் எஞ்சின் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தகவல் தொழில்நுட்ப மையத்தையும் இந்தியாவில் நிறுவுவதற்கு ஃபியட் க்றைஸ்லர் குழுமம் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








