புதிய கார் வாங்க முடிவு செய்திருந்தால் இப்பவே புக் பண்ணீடுங்க... இல்லாட்டி பின்னாடி ரொம்ப வருத்தப்படுவீங்க...
வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து மாருதி சுஸுகி, ஃபோர்டு உள்ளிட்ட நிறுவனங்களுடைய கார்களின் விலை உயரவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபோர்டு இந்தியா நிறுவனம் தனது வாகனங்களின் விலையை வரும் ஜனவரி 1ம் தேதி முதல் 3 சதவீதம் வரை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று (டிசம்பர் 10ம் தேதி) வெளியிடப்பட்டது. உற்பத்தி செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதனை ஈடுசெய்யும் விதமாக வாகனங்களின் விலையை உயர்த்தவுள்ளதாக ஃபோர்டு இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபோர்டு இந்தியா நிறுவன கார்களின் விலை 1 முதல் 3 சதவீதம் வரை உயரவுள்ளது. அதாவது மாடல்களை பொறுத்து சுமார் 5 ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை விலை உயரும். ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நிர்வாக இயக்குனர் வினய் ரெய்னா இந்த தகவலை கூறியுள்ளார்.

உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதன் காரணமாக இந்த நடவடிக்கை அவசியமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் 2020ம் ஆண்டிலேயே ஃபோர்டு இந்தியா கார்களை முன்பதிவு செய்து கொள்பவர்கள் விலை உயர்வில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள். எனவே நடப்பாண்டிலேயே நீங்கள் முன்பதிவு செய்து விட்டால், விலை உயர்வினால் பாதிக்கப்படாமல் தப்பிக்கலாம்.

முன்னதாக இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியும் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கார்களின் விலையை உயர்த்தவுள்ளதாக தெரிவித்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உற்பத்தி செலவு அதிகரிப்பு ஏற்படுத்திய தாக்கம் காரணமாகவே மாருதி சுஸுகி நிறுவனமும் கார்களின் விலையை உயர்த்தவுள்ளது.

என்றாலும் மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விலை எவ்வளவு உயரவுள்ளது? என்ற விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. விலை உயர்வு குறித்த முறையான அறிவிப்பை மாருதி சுஸுகி நிறுவனம் வரும் நாட்களில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது கார்களின் விலை எவ்வளவு சதவீதம் உயரவுள்ளது? என்பதும் அறிவிக்கப்படும்.

மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விலை உயர்வும் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. தற்போதைய நிலையில் ஆல்டோ, செலிரியோ, ஸ்விஃப்ட், இக்னிஸ், டிசையர், பலேனோ, சியாஸ், எர்டிகா, விட்டாரா பிரெஸ்ஸா, எஸ்-க்ராஸ் மற்றும் எக்ஸ்எல்-6 என ஏராளமான கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பிரச்னையால் ஏற்பட்ட விற்பனை சரிவில் இருந்து தற்போதுதான் கார் நிறுவனங்கள் மீண்டு வந்துள்ளன. ஊரடங்கு அமலுக்கு வந்த மார்ச் மாதத்திற்கு பின் இந்தியாவில் கார்களின் விற்பனை அதலபாதாளத்திற்கு சென்றது. ஆனால் கடந்த செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்தது.

பண்டிகை காலத்தை பயன்படுத்தி கொண்டு கார் நிறுவனங்கள் சரிவில் இருந்து மீண்டு வந்தன. ஆனால் அதற்குள்ளாக முன்னணி நிறுவனங்களுடைய கார்களின் விலை உயரவிருப்பது வாடிக்கையாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








