வீட்டிற்கே வந்து கார் சர்வீஸ்... புதிய வசதியை அறிமுகப்படுத்தியது ஃபோர்டு!
கார்களுக்கான வழக்கமான பராமரிப்பு பணிகளை வீட்டிலேயே செய்து தரும் டோர் சர்வீஸ் திட்டத்தை ஃபோர்டு கார் நிறுவனம் வழங்குகிறது. இதுதொடர்பான, கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

கொரோனா பிரச்னையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா லாக் டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், வெளியிடங்களுக்கு செல்வதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே செல்லும் நிலை உள்ளது.

இந்த நெருக்கடியான சூழலால், அனைத்து வர்த்தக ஸ்பானங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெரும் முதலீடுகளுடன் இயங்கி வரும் கார் உற்பத்தி மற்றும் அதன் சேவை சார்ந்த துறையில் ஈடுபட்டுள்ள டீலர்கள் பெரும் வருவாய் இழப்பையும், நஷ்டத்தையும் சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா அச்சம் காரணமாக, கார்களுக்கு வழக்கமான பராமரிப்புப் பணிகளை செய்வதற்கு சர்வீஸ் மையங்களுக்கு வருவதையும் வாடிக்கையாளர்கள் தவிர்த்து வருகின்றனர். இதனை மனதில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வழிகாட்டு முறைகளுடன் வீட்டிலேயே பராமரிப்புப் பணிகளை செய்து தரும் சர்வீஸ் திட்டத்தை ஃபோர்டு அறிமுகப்படுத்தி உள்ளது.

டயல் ஏ ஃபோர்டு என்ற பெயரிலான இந்த திட்டத்தின்படி, ஃபோர்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர் அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு சர்வீஸ் செய்வதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆயில் சேஞ்ச் உள்ளிட்ட வழக்கமான பராமரிப்புப் பணிகளை வீட்டிலேயே செய்து கொடுக்கப்படும். கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழுது நீக்குதல் உள்ளிட்ட பெரிய அளவிலான பராமரிப்பு தேவைப்பட்டால், சர்வீஸ் மையத்திற்கு எடுத்துச் சென்று சரிசெய்து பின்னர் வாடிக்கையாளர் வீட்டிலேயே கார் டெலிவிரி கொடுக்கப்படும். இதற்கு சர்வீஸ் மையத்திற்கு டீலர் பணியாளர் மூலமாக எடுத்துச் சென்று திரும்ப கொண்டு வந்து ஒப்படைக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.

டயல் ஏ ஃபோர்டு திட்டமானது சென்னை, பெங்களூர், ஆமதாபாத், அவுரங்காபாத், புவனேஷ்வர், கொச்சி, டெல்லி, பரீதாபாத், காஸியாபாத், குர்கான், ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்ணோ, மும்பை, நொய்டா, புனே, தானே மற்றும் திருவனந்தபுரம் நகரங்களில் வழங்கப்படுகிறது. மேலும், பல முக்கிய நகரங்களுக்கு இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வீஸ் தவிர்த்து, ஆன்லைனில் புதிய காரை முன்பதிவு செய்து வீட்டிலேயே டோர் டெலிவிரி திட்டத்தையும் ஃபோர்டு வழங்குகிறது. இதன் மூலமாக கொரோனா அச்சம் இல்லாமல், வாடிக்கையாளர்கள் தங்களது புதிய கார் கனவை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








