ஓட்டுனர் உதவி இல்லாமல் இயங்கும் கார்களை அறிமுகப்படுத்தும் ஃபோர்டு!
ஓட்டுனர் உதவி இல்லாமல் தானியங்கி கட்டுப்பாட்டில் செயல்படும் கார் மாடல்களை ஃபோர்டு நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஓட்டுனர் இல்லாமல் தானியங்கி கட்டுப்பாட்டில் இயங்கும் டிரைவர்லெஸ் கார்களை உருவாக்கும் முயற்சிகளில் கார் நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கார்களுக்கான தானியங்கி கட்டுப்பாட்டு தொழில்நுட்பம் நான்கு நிலைகளாக குறிப்பிடப்படுகிறது. இதில், ஆரம்ப கட்ட நிலைகளில் கார் நிறுவனங்கள் வெற்றி கண்டுள்ளன.
இதன்படி, நெடுஞ்சாலையில் மட்டும் ஓட்டுனர் உதவி இல்லாமல் தானியங்கி முறையில் செல்லும் கார் மாடல்கள் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கின்றன.

எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் பிரபலமான அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் ஏற்கனவே நெடுஞ்சாலைகளில் ஓட்டுனர் கட்டுப்பாடு இல்லாமல் தானியங்கி முறையில் செல்லும் கார்களை அறிமுகப்படுத்தி விட்டது. ஆட்டோபைலட் என்ற பெயரில் இந்த தொழில்நுட்பம் குறிப்பிடப்படுகிறது.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் கார்களுக்கான தானியங்கி தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளது. இந்த வரிசையில், அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனமும் விரைவில் இணைய உள்ளது. கார்களுக்காக உருவாக்கி இருக்கும் தானியங்கி கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தை ஆக்டிவ் டிரைவ் அசிஸ்ட் என்று ஃபோர்டு குறிப்பிடுகிறது.

அடுத்த ஆண்டு இந்த புதிய தானியங்கி கார் தொழில்நுட்பத்தை ஃபோர்டு அறிமுகப்படுத்த உள்ளது. முதலாவதாக மஸ்டாங் மேக்-இ எலெக்ட்ரிக் காரில் இந்த தானியங்கி கார் தொழில்நுட்பம் கொடுக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, தனது இதர கார் மாடல்களிலும் இந்த தானியங்கி தொழில்நுட்பத்தை வழங்க ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.

முதலில் அமெரிக்க சந்தையில் இந்த தானியங்கி தொழில்நுட்பம் கொண்ட மஸ்டாங் மேக்-இ எலெக்ட்ரிக் கார் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. டெஸ்லா மாடல் ஒய் காருக்கு எதிராக இந்த புதிய மாடல் நிலைநிறுத்தப்படு உள்ளது.

ஃபோர்டு நிறுவனத்தின் ஆக்டிவ் டிரைவர் அசிஸ்ட் தொழில்நுட்பத்தில் ரேடார், சென்சார்கள், டிரைவரை பார்த்த வகையில் பொருத்தப்படும் கேமரா ஆகியவை வழங்கப்பட உள்ளன. இந்த சாதனங்களை ஒருங்கிணைக்கும் தானியங்கி தொழில்நுட்பத்தின் சாஃப்ட்வேர் உருவாக்கப்பட்டு அதனை மேம்படுத்தி சோதனை செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக தெரிகிறது.

தற்போது ஹார்டுவேர்களை ஆர்டர் செய்து கொள்ளலாம் என்று ஃபோர்டு அறிவித்துள்ளது. இதற்கான சாஃப்ட்வேரை ஓவர் தி ஏர் என்று குறிப்பிடப்படும் இன்டர்நெட் தொடர்பு மூலமாக காரின் சாதனத்தில் ஃபோர்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப கட்டுப்பாட்டு மையம் நேரடியாக நிறுவலாம். அடுத்த ஆண்டு மூன்றாவது காலாண்டில் இந்த சாஃப்ட்வேர் அப்டேட் கொடுக்கப்படும்.

தற்போது டெஸ்லா, ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ள தானியங்கி கார் தொழில்நுட்பமும், ஃபோர்டு அறிமுகம் செய்ய இருக்கும் தானியங்கி கார் தொழில்நுட்பமும், ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் முழுமையான தகுதியை கொண்டிருக்காது. நெடுஞ்சாலையில் தானியங்கி கட்டுப்பாட்டில் கார் சென்றாலும் ஓட்டுனர் கண்காணிப்பும் அவசியம் என்ற நிலையில்தான் இந்த தொழில்நுட்பங்கள் உள்ளன.

எனினும், தொடர்ந்து செய்யப்படும் மேம்பாட்டு பணிகள் காரணமாக, கார்களுக்கான தானியங்கி தொழில்நுட்பம் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தானியங்கி கார்களுக்கான முழுமையான கட்டமைப்பு வசதிகளும், அதற்கான தொழில்நுட்பமும் மிகவும் பாதுகாப்பான முறையில் மேம்படுத்தப்பட வேண்டிய அவசியம் தொடர்ந்து இருந்து வருகிறது.


Click it and Unblock the Notifications








