புனே ஆலையில் கார் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தியது ஜெனரல் மோட்டார்ஸ்!
மஹாராஷ்டிர மாநிலம், புனே நகர் அருகில் செயல்பட்டு வந்த கார் ஆலையில் உற்பத்திப் பணிகளை முழுவதுமாக நிறுத்தி முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம். இதனால், இந்தியாவில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் முற்றிலுமாக முடிவுக்கு வருகிறது.

இந்தியாவில் கார் விற்பனையை மிக நீண்ட காலத்திற்கு முன்னதாகவே துவங்கிய நிறுவனங்களில் ஒன்றாக அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் இருந்து வந்தது. கடந்த 1996ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் வர்த்தகப் பணிகளை செய்து வந்தது.

மஹாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ள தலேகான் மற்றும் குஜராஜ் மாநிலம் ஹலோல் பகுதிகளில் இரண்டு கார் ஆலைகளுடன் இந்தியாவில் வர்ததக்தில் ஈடுபட்டு வந்தது. இந்த இரண்டு ஆலைகளிலும் உற்பத்தி செய்யப்பட்ட கார்களை உள்நாட்டு சந்தை மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வந்தது.

இந்த நிலையில், விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாத காரணத்தால், கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவில் தனது செவர்லே பிராண்டு கார்களின் விற்பனையை நிறுத்தியது.

மேலும், ஹலோல் ஆலையை சீனாவை சேர்ந்த செயிக் குழுமத்திடம் விற்பனை செய்தது. அந்த ஆலையில்தான் தற்போது எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

எனினும், தலேகானில் உள்ள ஆலையில் கார் உற்பத்தி தொடர்ந்து நடந்து வந்தது. அங்கு உற்பத்தி செய்யப்படும் கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில், இந்தியாவில் இருந்து முற்றிலுமாக வெளியேற ஜெனரல் மோட்டார்ஸ் முடிவு செய்தது.

மேலும், தலேகான் ஆலையை சீனாவை சேர்ந்த கிரேட்வால் மோட்டார் நிறுவனத்திடம் விற்பனை செய்ய திட்டமிட்டது. இதற்கான ஒப்பந்தப் பணிகள் இறுதிக் கட்டத்தில் இருந்தது.

கடந்த சில மாதங்களாக இந்தியா- சீனா இடையிலான எல்லைப் பிரச்னையால், சீன நிறுவனங்களின் முதலீடுகளை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இதனால், இந்த ஒப்பந்தம் கிடப்பில் இருக்கிறது. இதனால், தலேகான் ஆலையை கிரேட் வால் மோட்டார் நிறுவனத்திடம் விற்பனை செய்ய முடியாத நிலையில் ஜெனரல் மோட்டார் உள்ளது.

இந்த சூழலில், தலேகான் ஆலையில் கார் உற்பத்தியை நேற்றுடன் முழுவதுமாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அங்கு 1,800 தொழிலாளர்கள் வரை பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த சூழலில், இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்னை காரணமாக, தலேகான் ஆலையை விற்பனை செய்வது தொடர்பான ஒப்பந்தம் தொங்கலில் உள்ளதால், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் நிலை கவலைக்குரியதாக மாறி இருக்கிறது. எனினும், அடுத்த ஆண்டு இந்த ஆலை விற்பனை தொடர்பான ஒப்பந்தத்திற்கு நிச்சயம் அரசு அனுமதி கிடைத்துவிடும் என்று இரு நிறுவனங்களும் நம்பிக்கையுடன் உள்ளன.


Click it and Unblock the Notifications








