விநோத முறைகேட்டில் ஈடுபட்ட டீலர்! தக்க பாடம் புகட்டிய அசாம் அரசு.. வாடிக்கையாளர்களை இப்படியும் ஏமாற்றுவாங்களா!
விநோதமான முறையில் வாடிக்கையாளர்களை ஏமாற்றி வந்த கார் விற்பனையாளருக்கு அஸ்ஸாம் மாநில அரசு தக்க பாடம் புகட்டியிருக்கின்றது. இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

அஸ்ஸாம் மாநிலத்தின் போக்குவரத்துத்துறை அம்மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல கார் விற்பனையாளர் ஒருவரின் வர்த்தக உரிமையை தற்காலிகமாக ரத்து செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அந்த நிறுவனம் விற்பனைக்கான அந்தஸ்தை இழந்துள்ளது. மேலும், வாகன விற்பனையில் ஈடுபட முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கை அவர்களுக்கு தகுந்த பாடமே என்கின்றார், அந்த நிறுவனத்திடம் இருந்து காரை வாங்கிய அஸ்ஸாம் நிலத்தைச் சேர்ந்த ஓர் நபர். தற்போது வர்த்தக உரிமைத்தை இழந்திருக்கும் இந்த கார் விற்பனையாளர், புதிய கார்கள் என கூறி பழைய கார்களை மறு பெயிண்ட் செய்து விற்பனைக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், அஸ்ஸாம் மாநில போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதுகுறித்து விசாரித்ததில், விற்பனையாளர் நிர்வாகம் இது தற்செயலாக நடந்த நிகழ்வு என முரண்பாடான பதிலை அளித்திருக்கின்றனர். பதிலை ஏற்றுக் கொள்ளாத அதிகாரிகள் உடனடியாக விற்பனைக்கான உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர்.

கவுகாத்தி பகுதியில் இருக்கும் பாட்டர் கார் வேர்ல்ட் (Poddar Car World) எனும் டீலரே இந்த முறைகேட்டில் ஈடுபட்ட விற்பனையாளர் ஆவார். இந்த நிறுவனத்தின் வர்த்தக உரிமமே தற்போது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி நிறுவனத்தின் கார் விற்பனையாளர் இவர் ஆவார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்கனவே இதுபோன்று முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி கார் விற்பனையாளர் ஒருவரின் உரிமம் ரத்து செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இந்த சம்பவத்தில் 2015-16 வரை எந்த அறிவிப்பும் இன்றி கார்களை விற்பனைச் செய்யக்கூடாது என அந்த டீலருக்கு உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

இம்மாதிரியான சூழ்நிலையிலேயே மறு உத்தரவு வரும் வரை விற்பனையில் ஈடுபடக்கூடாது என பாட்டர் கார் வேர்ல்டு நிறுவனத்திற்கு கவுகாத்தி மாவட்ட போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கின்றனர். தொடர்ந்து அவர்களிடத்தில் அதிகாரிகள் விசாரணையிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக, டீலர்கள் புதிய வாகனங்களை தலையில் கட்ட பல விதமான முறைகேடுகள் மற்றும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்குவது வழக்கமே. ஆனால், பழைய காரை புதியதுபோல் மறு பெயிண்ட் செய்து விற்பனைச் செய்திருப்பதாக வாகன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

இதற்கான தக்க பாடமே தற்காலிக வர்த்த உரிமம் அமைந்திருக்கின்றது. இந்த விற்பனையாளர் நீண்ட காலமாக இதுபோன்ற விதிமீறலில் ஈடுபட்டு வருவதால், இந்த முடக்கத்தை நிரந்தரமானதாக மாற்ற வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். ஆனால், விசாரனைக்கு பின்னரே முடிவெடுக்க முடியும் அதிகாரிகள் வட்டாரம் கூறியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








