ரூ.10,000 இருந்தால் போதும்... புது ஹோண்டா அமேஸ் வீடு வந்து சேரும்
ரூ.10,000 மட்டம் முன்பணமாக செலுத்தி, மீதத் தொகையை நீண்ட கால கடன் திட்டம் மூலமாக செலுத்தும் வகையில் புதிய ஹோண்டா அமேஸ் காருக்கு சிறப்பு கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் திட்டம் பற்றிய முழுமையான விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா அமேஸ் கார் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. மாருதி டிசையர் காருக்கு இந்த ரகத்தில் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது கார் மாடலாகவும் உள்ளது. பிரிமீயம் டிசைன், வசதிகள், எஞ்சின், பட்ஜெட் என அனைத்திலும் நிறைவை தருகிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, கார் விற்பனை மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, கார் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக அமேஸ் காருக்கு சிறப்பு கடன் திட்டங்களை ஹோண்டா கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின்படி, குறைவான மாதத் தவணையுடன் நீண்ட காலம் திருப்பி செலுத்தும் விதத்தில் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமேஸ் காருக்கான இந்த கடன் திட்டத்தில் அதிகபட்சமாக 8 ஆண்டுகள் வரை திருப்பி செலுத்தும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

மேலும், அமேஸ் காரின் ஆன்ரோடு விலையில் 100 சதவீதம் வரை கடன் பெறும் வாய்ப்பும் உள்ளது. இதன்படி, ரூ.10,000 மட்டும் முன்பணமாக செலுத்திவிட்டு, மீதமுள்ள தொகையை கடனாக பெறும் வாய்ப்பும் உள்ளது.

இந்த சிறப்பு கார் கடன் திட்டத்திற்கு 8.35 சதவீத வட்டி வீதத்தில் கொடுக்கப்படுகிறது. ஒரு லட்சம் கடன் தொகைக்கு ரூ.1,432 என்ற அளவில் மாதத் தவணையை பெறும் திட்டமும் இதில் வழங்கப்படுகிறது.

தற்போது ஹோண்டா அமேஸ் காருக்கு மட்டும் வழங்கப்படும் இந்த சிறப்பு கார் கடன் திட்டம் விரைவில் பிற கார் மாடல்களுக்கும் வழங்கப்படும் என்று ஹோண்டா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கொரோனாவால் சம்பளம் மற்றும் வருவாய் குறைந்துள்ளவர்களுக்கு இந்த கார் கடன் திட்டம் சிறப்பானதாக அமையும்.

இதுதவிர்த்து, ரூ.32,000 வரை சேமிப்புச் சலுகைகளையும் அமேஸ் காருக்கு ஹோண்டா வழங்குகிறது. எகஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் நேரடி தள்ளுபடியாக இவை வேரியண்ட்டுக்கு தக்கவாறு வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








