செம்ம... ஜெர்மன் நாட்டின் புகழ்மிக்க விருதை வென்ற ஹோண்டா இ கார்... ஜப்பான் நிறுவனத்தின் புதிய சாதனை!
ஹோண்டா நிறுவனத்தின் ஹோண்டா இ மின்சார கார் ஜெர்மன் நாட்டின் கார் ஆஃப் தி இயர் விருதை வென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஹோண்டா நிறுவனத்தின் முதல் மின்சார காராக ஹோண்டா இ தயாரிக்கப்பட்டுள்ளது. புதுமை மற்றும் நவீனம் என இரண்டையுமே கலந்த வடிவத்தைப் பெற்றிருக்கும் இந்த காரே ஜெர்மன் நாட்டின் 'கார் ஆஃப் தி இயர்' (ஆண்டின் சிறந்த கார் விருது) எனும் விருதை தட்டிச் சென்றிருக்கின்றது.

ஜெர்மன் நாட்டின் இந்த விருதைப் பெறும் முதல் ஜப்பானிய தயாரிப்பு இதுவே ஆகும். ஆகையால், ஹோண்டா நிறுவனம் மட்டுமின்றி ஜப்பானியர்களும் தங்கள் நாட்டின் தயாரிப்பை நினைத்து பெறுமைக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். ஆண்டின் சிறந்த கார் விருது மட்டுமின்றி 'நியூ எனர்ஜி' பிரிவிலும் இக்கார் வெற்றியையேப் பெற்றிருக்கின்றது.

தினசரி பயண பிரியர்களைக் கவரும் வகையில் கடந்த ஆகஸ்டு மாதம் ஆரம்பத்தில் இக்காரை ஹோண்டா நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது பிற மின்சார கார்களைப் போன்றில்லாமல் குறைந்த ரேஞ்சை வழங்கும் வகையில் மட்டுமே வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

இக்காரை முழுமையாக சார்ஜ் செய்தால் 280 கிமீ தூரம் வரை மட்டுமே பயணிக்க முடியும் எனும் பேட்டரி திறனில் ஹோண்டா இக்கார விற்பனைச் செய்து வருகின்றது. எனவேதான், அன்றாடம் மற்றும் அருகாமை பணிகளுக்கு மட்டுமே பயன்படக் கூடிய காராக இது காட்சியளிக்கின்றது. இக்காரை நாங்கள் ஏற்கனவே கூறியதைப் போலவே நவீன மற்றும் பழமைத் தோற்றம் கலந்து ஹோண்டா வடிவமைத்திருக்கின்றது.

இதற்கு அந்த நிறுவனம், அதன் பழைய மாடல்களான ஹோண்டா என்360 மற்றும் என்600 ஆகிய மாடல்களின் உருவத்தைப் பயன்படுத்தியுள்ளது. இது 1960ம் ஆண்டுகளில் கொடிகட்டிப் பறந்த கார்களாகும். இவற்றின் உருவத்தைத் தழுவியே ஹோண்டா இ வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. உருவத்திலும் பழைமையான தோற்றத்தைப் பெற்றிருக்கும் இக்கார் வசதி மற்றும் அம்சங்களிலும் நவீன தொழில்நுட்பத்தைப் பெற்றிருக்கின்றது.

இதற்கு அக்காரின் ஹெட்லைட் முதல் பின்பக்கத்தை உதவும் ரியர் வியூ மிர்ரர்கள் என அனைத்துமே சான்றாக இருக்கின்றன. பின்பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகளுக்கு பதிலாக கேமிராக்கள் இரு பக்கத்திலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இவை காருக்கு பின்னாடி நிகழும் சம்பவங்களை காருக்குள் இருக்கும் திரை வாயிலாக காட்சிப்படுத்தும்.

இதுபோன்ற பல்வேறு நவீன வசதிகளை இக்கார் பெற்றிருக்கின்றது. எனவேதான் ஜெர்மன் நாட்டின் கார் ஆஃப் தி இயர் விருதை இக்கார் வென்றிருக்கின்றது. ஹோண்டா நிறுவனத்தின் இந்த மின்சார உலகின் ஒரு சில நாடுகளில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அறிமுகம் பற்றிய தகவல் இதுவரை வெளியிடவில்லை. எனவே இதன் இந்திய வருகை சந்தேகம்தான்.

ஹோண்டா இ மின்சார கார் ஐரோப்பிய சந்தைகளில் 33,000 யூரோக்கள் எனும் விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இது, அதன் போட்டியாளர் என கருதப்படும் ரெனால்ட் சோயி இசட்இ50 மின்சார காரைக் காட்டிலும் மிக அதிக விலையாகும். இதுதவிர குறைந்த ரேஞ்ஜையும் இக்கார் வழங்குகின்றது.


Click it and Unblock the Notifications








