ஜாகுவார் ஐ-பேஸ் காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கியது!! மெர்சிடிஸ் இக்யூசி-க்கு போட்டி ரெடி
இந்தியாவில் ஐ-பேஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காருக்கான முன்பதிவுகளை ஏற்று கொள்ளவுள்ளதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜாகுவார் ஐ-பேஸ் எஸ், எஸ்இ மற்றும் எச்எஸ்இ என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. முன்பதிவுகளை ஏற்க துவங்கியதுடன் இந்த எலக்ட்ரிக் காருக்கான சார்ஜிங் தேவையை பூர்த்தி செய்வதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் ஜாகுவார் கூட்டணியையும் ஏற்படுத்தி கொண்டுள்ளது.

இந்த கூட்டணியின் மூலமாக ஜாகுவார் லேண்ட் ரோவர் பிராண்ட், இந்தியாவில் ஐ-பேஸ் காரின் வாடிக்கையாளர்களுக்கு அலுவலகத்தில் மற்றும் வீட்டில் சார்ஜிங் தேவையை நிவர்த்தி செய்வதற்கான வழியினை காட்டவுள்ளது. டாடா பவர் அதன் ‘இஇசட் (EZ) சார்ஜ்' என்ற இவி சார்ஜிங் நெட்வொர்க் மூலமாக 200க்கும் அதிகமான சார்ஜிங் நிலையங்களை இந்தியா முழுவதும் நிறுவியுள்ளது.

இந்த நிலையங்களை ஐ-பேஸ் எலக்ட்ரிக் காரின் வாடிக்கையாளர்கள் உபயோகப்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். இந்த சார்ஜிங் நிலையங்கள் நகரத்திற்குள் மால்கள், உணவகங்கள், அலுவலங்கள், குடியிருப்பு வளாகங்களிலும் நெடுஞ்சாலைகளிலும் நிறுவப்பட்டுள்ளன.

ஜாகுவார் நிறுவனம் ஐ-பேஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் உத்தரவாத காலம் குறித்த விபரங்களையும் வெளியிட்டுள்ளது. இதன் 90 kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பிற்கு 8-வருட அல்லது 1,60,000 கிமீ உத்தரவாதத்தை ஜாகுவார் நிறுவனம் வழங்கவுள்ளது. இவற்றுடன் 5-வருட சர்வீஸ் தொகுப்பையும் இந்த எலக்ட்ரிக் காரின் வாடிக்கையாளர்கள் பெறவுள்ளனர்.

ஐ-பேஸில் 7.4 கிலோவாட்ஸ் ஏசி சார்ஜர் வழங்கப்படவுள்ளது. இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காருக்கான முன்பதிவுகளை ஏற்க துவங்கியதை குறித்து ஜாகுவாட் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரோகித் சூரி கருத்து தெரிவிக்கையில், "ஜாகுவார் ஐ-பேஸ் அறிமுகத்துடன் இந்திய சந்தையில் எங்கள் மின்சார பயணத்தைத் தொடங்குவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.

நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் பார்வையில் கவனம் செலுத்துகையில், ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் வரிசையில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என கூறினார். அறிமுகமானதிலிருந்து, ஜாகுவார் ஐ-பேஸ் பல தரப்பட்ட வாடிக்கையாளர்களின் பாராட்டுகளையும் 80க்கும் மேற்பட்ட உலகளாவிய விருதுகளையும் வென்றுள்ளது.

இதில் 2019 ஆண்டிற்கான உலக கார், ஆண்டிற்கான சிறந்த கார் வடிவமைப்பு மற்றும் உலக பசுமை கார் ஆகியவை அடங்கும். மூன்று உலக கார் பட்டங்களையும் ஒன்றாக வென்ற முதல் கார் இதுவாகும். இந்திய சந்தையில் இதன் சமீபத்திய 2021 அப்டேட்டை ஜாகுவார் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ-பேஸில் இரு முனைகளிலும் நிரத்தர காந்த எலக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படுகின்றன. 90 கிலோவாட்ஸ்/நேரம் லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்புடன் வழங்கப்படும் இந்த எலக்ட்ரிக் மோட்டார்கள் ஒன்றாக இணைந்து அதிகப்பட்சமாக 395 பிஎச்பி மற்றும் 696 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

0-வில் இருந்து 100kmph என்ற வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் எட்டிவிடும் இந்த எலக்ட்ரிக் காரின் அதிகப்பட்ச வேகம் 200kmph ஆகும். 2021 ஐ-பேஸை முழு சார்ஜ் நிரப்பி கொண்டு அதிகப்பட்சமாக 470கிமீ வரையில் பயணிக்கலாம். காருக்கு உள்ளே இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு ஒன்று, இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு ஒன்று மற்றும் க்ளைமேட் கண்ட்ரோல் யூனிட்டிற்கு ஒன்று என மொத்தம் 3 திரைகள் வழங்கப்படுகின்றன.

இவற்றுடன் ஆடியோ உள்ளிட்ட கண்ட்ரோல்களுடன் பல செயல்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரம், நன்கு மேம்பட்ட இருக்கைகள், அதிக எண்ணிக்கையில் காற்றுப்பைகள், சன்ரூஃப் உள்ளிட்டவையும் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் கேபினில் வழங்கப்படுகிறது. செயல்திறன்மிக்க லக்சரி எலக்ட்ரிக்-எஸ்யூவி காரான ஜாகுவார் ஐ-பேஸுக்கு இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகமான மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூசி மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள ஆடி இ-ட்ரோன் முக்கிய போட்டி கார்களாக விளங்கும்.


Click it and Unblock the Notifications








