செம கெத்து... இந்தியாவிற்கே முன்னோடியான காரியத்தை செய்த கேரளா... மற்ற மாநிலங்கள் பாத்து கத்துக்கணும்
இந்தியாவிற்கே முன்னோடியான காரியம் ஒன்றை கேரளா செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கேரளாவின் மோட்டார் வாகன துறைக்கு (Motor Vehicle Department - MVD), நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை டெலிவரி செய்யும் பணிகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. முன்னதாக கேரள மோட்டார் வாகன துறை, 65 டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவிகளுக்கு ஆர்டர் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

'பாதுகாப்பான கேரளா' திட்டத்தின் ஒரு பகுதியாக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை கேரள மோட்டார் வாகன துறை கொள்முதல் செய்து வருகிறது. அதன் அமலாக்க பணிகளுக்கு டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவிகள் பயன்படுத்தப்படவுள்ளன. டெலிவரி கொடுக்கப்பட்டுள்ள கார்களை சுற்றியும், கேரள மோட்டார் வாகன துறையின் அதிகாரப்பூர்வ லோகோ இடம்பெற்றுள்ளது.

எனினும் ரேடியோ மற்றும் ஸ்ட்ராப் லைட் போன்ற கூடுதல் உபகரணங்களை இந்த கார் பெற்றுள்ளதா? என தெரியவில்லை. ஆனால் பொதுவாக மோட்டார் வாகன துறையின் வாகனங்களில் இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கும். எனவே டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரும் இந்த உபகரணங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதே சமயம் ரேடார் ஸ்பீடு சென்சார்கள், கேமரா உள்ளிட்ட உபகரணங்களை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் பெற்றுள்ளது. வாகனத்தின் வெளிப்புறத்தில் வேறு எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. மத்திய அரசு நிறுவனமான இஇஎஸ்எல் (Energy Efficiency Services Ltd - EESL) இந்த எலெக்ட்ரிக் கார்களை கொள்முதல் செய்துள்ளது.

இஇஎஸ்எல் நிறுவனத்திடம் இருந்து, கேரள மோட்டார் வாகன துறை குத்தகைக்கு எடுத்துள்ளது. எனவே இந்த புதிய கார்களை இஇஎஸ்எல் நிறுவனமும் பராமரிக்கும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

எனவே அரசாங்கத்தின் பயன்பாட்டிற்காக இஇஎஸ்எல் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் கார்களை கொள்முதல் செய்வதில் தீவிரமாக உள்ளது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், இந்தியாவில் தற்போது அதிகம் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை பெறுகிறது. அத்துடன் தற்போதைய நிலையில் இந்தியாவில் கிடைக்கும் மலிவான எலெக்ட்ரிக் எஸ்யூவி காரும் இதுதான்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் மொத்தம் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த காரின் ஆரம்ப விலை 13.99 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்). இஇஎஸ்எல் நிறுவனம் எந்த வேரியண்ட்டை கொள்முதல் செய்துள்ளது? என்பது சரியாக தெரியவில்லை. என்றாலும் இது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் எக்ஸ்இஸட்+ (XZ+) வேரியண்ட்டாக இருக்கலாம் என தெரிகிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில், 30.2 kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 312 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும் என அராய் அமைப்பு சான்று வழங்கியுள்ளது. ஆனால் நடைமுறை பயன்பாட்டில் இதை விட குறைவான ரேஞ்ச் கிடைப்பதற்கான வாய்ப்புகளே உள்ளன.

மற்ற ஒரு சில விஷயங்களை போல், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதிலும், நாட்டிற்கே முன்னோடியாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு திகழ்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், காற்று மாசுபாடு பிரச்னை மட்டுமல்லாது, கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு பிரச்னையும் கட்டுப்பாட்டிற்குள் வரும்.


Click it and Unblock the Notifications








