கியா செல்டோஸ் மின்சார மாடல் அறிமுகம் குறித்த புதிய தகவல்கள்!
சக்திவாய்ந்த பேட்டரியுடன் கியா செல்டோஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில், தி கியா என்ற இணையதளத்தில் கியா செல்டோஸ் மின்சார மாடல் குறித்த சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதில், கியா செல்டோஸ் மின்சார மாடல் சக்திவாய்ந்த பேட்டரியுடன் வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கியா செல்டோஸ் காரின் மின்சார மாடலில் 64kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கும் என்றும், இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கியா சோல் மற்றும் நிரோ எலெக்ட்ரிக் கார்களைவிட சற்றே குறைவான ரேஞ்ச் கொண்டதாக கியா செல்டோஸ் மின்சார கார் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. எடை கூடுதல் என்பதே காரணமாக இருக்கும்.

இந்த காரின் பேட்டரி மற்றும் மின் மோட்டார்கள் இணைந்து 204 எச்பி பவரை அதிகபட்சமாக வழங்கும். விரைவில் இந்த காரின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.

மேலும், கியா செல்டோஸ் எஸ்யூவியின் மின்சார மாடலானது ஆசிய நாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும் அந்த செய்தி குறிப்பிடுகிறது. அதாவது, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனினும், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, கியா செல்டோஸ் மின்சார மாடலின் உற்பத்திப் பணிகள் ஒத்தி வைப்பதற்கு கியா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். இதனால், இந்த எஸ்யூவியை ஆவலோடு எதிர்பார்ப்பவர்களுக்கு சற்றே ஏமாற்றம் ஏற்படலாம்.

வரும் ஆகஸ்ட் மாதத்தில் கியா செல்டோஸ் எலெக்ட்ரிக் கார் வெளி உலகிற்கு தரிசனம் கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.

புதிய கியா செல்டோஸ் எஸ்யூவியின் மின்சார மாடலானது ரூ.20 லட்சத்தை ஒட்டிய விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் இந்த விலையில் வரும்போது மிகச் சிறந்த தேர்வாக அமையும்.


Click it and Unblock the Notifications








