கியா செல்டோஸை பெற அதிகப்பட்சமாக 4 மாதங்கள் காத்திருக்க வேண்டுமாம்!! புதிய அறிவிப்பு வந்தது!
இந்தியாவில் தற்சமயம் உள்ள பிரபலமான எஸ்யூவி கார்களுள் ஒன்றான செல்டோஸை முன்பதிவு செய்தவர்களுக்கான காத்திருப்பு காலம் 4 மாதங்கள் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் நுழைந்தபோது பிரபலமான எஸ்யூவியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக செல்டோஸை முதலாவது மாடலாக அறிமுகப்படுத்தியது.

ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் எம்ஜி ஹெக்டர் உள்ளிட்டவற்றின் விற்பனை போட்டியினை சமாளித்துவரும் செல்டோஸ் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வருடத்தை சில மாதங்களுக்கு முன் கடந்தது.

இதனை நினைவுக்கூறும் விதமாக முதலாண்டு நிறைவு எடிசன் செல்டோஸில் கொண்டுவரப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கும். தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்பை சந்தைப்படுத்துவதை காட்டிலும் அதனை உரிய நேரத்தில் வாடிக்கையாளர்களிடம், அவர்களது ஆர்வம் குறையும் முன்னரே டெலிவிரி செய்வது முக்கியமானதாகும்.

இதனை சரியாக புரிந்துகொண்ட கியா, செல்டோஸிற்கு முன்பு வெறும் 15 நாட்களை தான் காத்திருப்பு காலமாக நிர்ணயித்தது. ஆனால் கொரோனாவினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகளினால், எஸ்யூவி வாகனங்களுக்கு ஏற்பட்ட தேவை அதிகரிப்பினால் செல்டோஸை முன்பதிவு செய்தவர்கள் சில மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகப்பட்சமாக செல்டோஸ் டீசல் வேரியண்ட்களை முன்பதிவு செய்தவர்கள் 4 மாதங்கள் வரையில் காத்திருந்தே ஆக வேண்டும். குறைந்தப்பட்சமாக செல்டோஸ் ஜிடிஎக்ஸ் ட்ரிம்-விற்கு 3-4 வாரங்கள் (1 மாதம்) வாடிக்கையாளர்கள் காத்திருந்தாலே போதும்.

அதுவே ஜிடிஎக்ஸ் ப்ளஸ் ட்ரிம்-ஐ 7-ஸ்பீடு ட்யுல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் பெறுபவர்கள் 10-11 வாரங்கள் காத்திருக்க வேண்டும். ஜிடிஎக்ஸ் ப்ளஸ் மற்றும் மற்ற அனைத்து 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்களுக்கும் 14- 15 வாரங்கள் காத்திருப்பு காலமாக கியா நிர்ணயித்துள்ளது.

ஊரடங்குகளினால் இந்த காத்திருப்பு காலம் அதிகரிப்பு கொண்டுவரப்பட்டிருந்தாலும் இதற்கான காரணம் குறித்து கியா எந்தவொரு தெளிவான விளக்கத்தையும் அளிக்கவில்லை. கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் விலை ரூ.9.89 லட்சத்தில் இருந்து ரூ.17.34 லட்சம் வரையில் உள்ளது.


Click it and Unblock the Notifications








