விலை அதிகரிப்புடன் 2021ஆம் ஆண்டை துவங்கும் கியா மோட்டார்ஸ்- அதிர்ச்சியில் கியா கார் பிரியர்கள்...
கியா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் செல்டோஸ் மற்றும் சொனெட் எஸ்யூவி கார்களின் விலைகளை வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் உயர்த்தவுள்ளது. கூடுதல் தகவல்களை இனி பார்ப்போம்.

கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் செல்டோஸ் எஸ்யூவி, கார்னிவல் எம்பிவி மற்றும் சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி என்ற 3 கார் மாடல்களை சந்தைப்படுத்தி வருகிறது. இதில் கியாவிற்கு நம் நாட்டில் மிக பெரிய அடையாளத்தை பெற்று கொடுத்த மாடல் என்று பார்த்தால் அது முதல் அறிமுகமான செல்டோஸ்தான்.

கார்னிவல் 2020 பிப்ரவரி மாதத்தில் ஆட்டோ எக்ஸ்போவிலும், சொனெட் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் 2021ஆம் ஆண்டில் இருந்து கியா செல்டோஸ் எஸ்யூவி மற்றும் சொனெட் மாடல்களின் எக்ஸ்ஷோரூம் விலைகள் கணிசமாக அதிகரிக்கப்படவுள்ளன.

மற்றப்படி இவற்றிற்கு இடையில் அறிமுகப்படுத்தப்பட்ட கார்னிவல் எம்பிவி காரின் விலையில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. இதுகுறித்து டீலர்களுக்கு கியா அனுப்பியுள்ள அறிக்கையில், இந்த விலை அதிகரிப்பு ‘கணிசமானதாக' இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து இந்த கியா கார்களை டெலிவிரி எடுக்கும் வாடிக்கையாளர்கள் அதிகரிக்கப்பட்ட தொகையினை கொடுத்தாக வேண்டும். எனவே ஏற்கனவே இந்த கார்களை முன்பதிவு செய்து இந்த வருடத்திற்குள்ளாக டெலிவிரி எடுக்கும் வாடிக்கையாளர்கள் விலை அதிகரிப்பை பெற மாட்டார்கள்.

இவ்வாறு கார்களின் விலைகள் ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் அதிகரிக்கப்படுவது வாடிக்கையானதே. இத்தகைய விலை அதிகரிப்பிற்கு போக்குவரத்து செலவு, அதிகரித்துவரும் கார் பாகங்களின் விலைகள் உள்ளிட்டவை காரணங்களாக தயாரிப்பு நிறுவனங்களால் கூறப்படுகிறது.

ரூ.9.90 லட்சத்தில் இருந்து ரூ.17.55 லட்சம் வரையில் விலை கொண்ட செல்டோஸின் விலை கடைசியாக கடந்த 2020 ஜனவரி மாதத்தில் அதிகரிக்கப்பட்டது. சொனெட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.6.72 லட்சத்தில் இருந்து ரூ.13 லட்சம் வரையில் உள்ளது.


Click it and Unblock the Notifications








