கூண்டுக்குள் அடைபட்ட சிங்கம் விடுதலையானது... தடைகாலத்திலும் டெலிவரியால் மகிழ்விக்கும் கியா!
கூண்டுக்குள் அடைபட்டிருந்த சிங்கம் விடுதலையானதைப் போல் கியா நிறுவனம் அதன் டெலிவரியை பணியை மீண்டும் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் கடந்த 50 நாட்களுக்கும் அதிகமாக முடக்கப்பட்ட நிலையேக் காணப்படுகின்றது. இதனால் பள்ளி, கல்லூரி முதல் அனைத்து துறைகளும் இயக்கமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால், மிகப்பெரிய விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது இந்திய ஆட்டோமொபைல்ஸ் துறை. ஒரு யூனிட்டைக்கூட விற்க முடியாத அவல நிலையில் அவை சிக்கி தவித்து வந்தன.

இந்த நிலையிலேயே நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவின்போது லேசான தளர்வு குறிப்பிட்ட துறைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டது. இது, வாகனங்களைச் சார்ந்து இயங்கும் துறைகளுக்கும் அடங்கும். ஆனால், போக்குவரத்து வாகனங்களுக்கு இந்த தளர்வு பொருந்தாது என்பது குறிப்பிடத்தகுந்தது.

தற்போது வழங்கப்பட்டிருக்கும் இந்த தளர்வு வாகன விற்பனையாளர்களுக்கு குஷியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. மேலும், முந்தைய கால கட்டத்தில் விட்டதை மிக விரைவில் குறுகிய காலத்திலேயே பிடித்துவிட வேண்டும் என எண்ணி வேலையைத் தொடங்கியிருக்கின்றன. இதற்காக ஒரு சில நிறுவனங்கள் சலுகையை வாரி வழங்க ஆரம்பித்திருக்கின்றன.

குறிப்பாக, கொரோனாவின் இக்கட்டான காலச் சூழ்நிலையிலும் வாகனங்களை விற்பனைச் செய்யும் விதமாக நாட்டின் அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு மாறியிருக்கின்றனர்.
இதை பலர் அணுகி தங்களுக்கான வாகனங்களை புக் செய்து வருகின்றனர். அந்தவகையில், புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு கார்களை டெலிவரி செய்யும் பணியில் வாகன நிறுவனங்கள் களமிறங்கியிருக்கின்றன.

இதேபணியில்தான் தற்போது கியா நிறுவனமும் இறங்கியிருக்கின்றது. இந்த நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து முதல்முறையாக களமிறக்கியது செல்டோஸ் எஸ்யூவி ரக காரைதான். இந்த காரின் டெலிவரியைதான் தற்போது கியா தொடங்கியிருக்கின்றது.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இந்த கார் உருவெடுத்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் தேசியளவிலான ஊரடங்கு உத்தரவு நிலுவையில் இருக்கும் நேரத்திலும், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தளர்வு விதிகளைப் பயன்படுத்தி கார் டெலிவரி பணியை தொடங்கியிருக்கிறது கியா.
அந்தவகையில், நெடு நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பின்னர் கியா செல்டோஸ் எஸ்யூவி காரையே முதல் டெலிவரியாக குர்கானைச் சேர்ந்த ஓர் தொழிலதிபருக்கு வழங்கியிருக்கின்றது. அவர், அனுராக் சின்ஹாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Image Courtesy: Kia Seltos Club India
அனுராக் சின்ஹாமிற்கு கார் டெலிவரி வழங்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. கியா நிறுவனம் இந்த டூர் ஸ்டெப் டெலிவி சேவையை வாடிக்கையாளர்களின் விருப்பத்தைப் பொருத்து வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, அலுவலக நேரமல்லாத காலங்களிலும் வாடிக்கையாளரின் விருப்பமான நேரத்தில் கார்களை டெலிவரி கொடுத்து வருகின்றது.

இந்த டெலிவரிக்கு முன்பாக கிருமி நாசினிகள் கொண்டு கார் சுத்தம் செய்யப்படுகின்றன. குறிப்பிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பின்னரே வாடிக்கையாளரிடம் கார் ஒப்படைக்க வெளியே அனுமதிக்கப்படுகின்றது.

கார்களின் டெலிவரி மட்டுமல்ல அவற்றை வாங்குவதற்குகூட இனி நாம் ஷோரும்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், தடையுத்தரவு காலத்தைக் கருத்தில் கொண்டு வாகனம் வாங்குவதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதாவது பெரும்பாலான வாகன நிறுவனங்கள் ஆன்-லைன் வர்த்தகத்திற்கு மாறியிருக்கின்றன. அந்தவகையில், குறிப்பிட்ட ஏழு எளிய வழிகளைப் பின்பற்றினாலே போதும், கியா செல்டோஸ் காரை வீட்டு வாசலிலேயே டெலிவரி பெற முடியும்.

கியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தைத் தொடர்பு கொண்டு வேரியண்ட், நிறம், நிதியுதவி, இஎம்ஐ தேர்வு, தேவையான ஆவணங்கள் போன்ற ஒரு சிலவற்றை சமர்பித்தாலே போதும் அந்நிறுவனத்தின் அதிகாரிகள் உங்களைத் தொடர்பு கொள்வர். மேலும், இதே தளத்தில் காரை டெஸ்ட் டிரைவ் செய்வதற்கான ஆப்ஷனும் வழங்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு, அனைத்து விதமான வசதியையும் ஆன்லைன் பக்கம் திருப்பி வாடிக்கையாளர்களை கியா கவர்ந்து வருகின்றது. எனவே, முந்தையக் காலங்களைக் காட்டிலும் கியா நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்குவது மிக எளிதான ஒன்றாக மாறிவிட்டது. மேலும், கஷ்ட காலத்தில் இருந்து லேசாக மீண்டிருப்பதில் விற்பனை இலக்கை தொடுவதற்கான முயற்சிகளை அது மேற்கொண்டு வருகின்றது.

கியா நிறுவனம் தற்போது செல்டோஸ் எஸ்யூவி மற்றும் கார்னிவல் எம்பிவி ஆகிய இரு மாடல்களை மட்டுமே இந்திய சந்தையில் விற்பனைச் செய்து வருகின்றது. ஆனால், இதில் கியா செல்டோஸ் மட்டுமே ஆன்லைன் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது. எனவே, கியாவின் கார்னிவல் எம்பிவி சொகுசு காரை ஆன்லைன் வாங்க முடியாது. கியா செல்டோஸ் எஸ்யூவி கார் இந்தியாவில் மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா காருக்கு போட்டியாக விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications








