ஸ்கெட்ச் போட்ட கியா மோட்டார்ஸ் நிறுவனம்... இந்த ஆண்டு இறுதிக்குள் செய்யப்போகும் காரியம் இதுதான்...
கியா மோட்டார்ஸ் நிறுவனம் டீலர்ஷிப்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது டீலர்ஷிப்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புகிறது. குறிப்பாக சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு தங்களது சேவை எளிதாக கிடைக்க வேண்டும் என கியா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தால் சந்தையில் தன்னுடைய இடத்தை இன்னும் வலுவாக்கி கொள்ள முடியும்.

கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தற்போது டீலர்ஷிப்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பதாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை விற்பனை அதிகாரியுமான டா-ஜின் பார்க் கூறியுள்ளார். அத்துடன் நடப்பாண்டு இறுதிக்குள் 300 டீலர்ஷிப்கள் என்ற எண்ணிக்கையை எட்டுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கியா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் செல்டோஸ் எஸ்யூவி காரை அறிமுகம் செய்ததன் மூலம் இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்தது. இந்தியாவில் தனது பயணத்தை தொடங்கியபோது கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டீலர்ஷிப்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் 160 நகரங்களில் 265 ஆக இருந்தது.
ராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா புதிய மீட்டியோர் 350? வீடியோ!
ஒரு புதிய நிறுவனம் இவ்வளவு அதிகமான டீலர்ஷிப்களுடன் களம் கண்டது ஆச்சரியமான விஷயம்தான். இதுதவிர தனது டீலர் பார்ட்னர்களின் லாபத்தை அதிகரிக்க செய்வதிலும் கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. மேலும் விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டா-ஜின் பார்க் கூறியுள்ளார்.

தற்போதைய நிலையில் பெங்களூர், ஃபரிதாபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி மையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஈடி ஆட்டோ செய்தி வெளியிட்டுள்ளது. கியா நிறுவனம் தற்போதைய நிலையில் செல்டோஸ், கார்னிவல் மற்றும் சொனெட் ஆகிய மூன்று கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

இதில், கார்னிவல் பிரீமியம் எம்பிவி கார் கடந்த பிப்ரவரி மாதமும், சொனெட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் கடந்த செப்டம்பர் மாதமும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இந்த மூன்று கார்களும் ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன. குறிப்பாக செல்டோஸ் மற்றும் சொனெட் கார்களின் விற்பனை அமோகமாக உள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி கடந்த மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு செல்டோஸின் விற்பனை சற்று குறைந்திருந்தாலும், மாதந்தோறும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை கியா நிறுவனத்திற்கு அது ஈட்டி தருகிறது. அதே சமயம் புது வரவான கியா சொனெட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் தனது ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்டியுள்ளது.

இந்த செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வெனியூ போன்ற கார்களுக்கு கியா சொனெட் தலைவலியாக மாறியுள்ளது. அத்துடன் டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் சமீபத்தில் விற்பனைக்கு வந்த நிஸான் மேக்னைட் உள்ளிட்ட கார்களுடனும் கியா சொனெட் போட்டியிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








