ஊழியர்களுக்காக பேருந்தை உல்லாச கப்பலாக மாற்றிய கேஎஸ்ஆர்டிசி... நடிகர்களின் கேரவனுக்கு இணையான வசதி!
ஊழியர்களின் பயன்பாட்டிற்காக மிக மிக பழைய பேருந்தை உல்லாச கப்பலுக்கு இணையான வசதியுடன் கேஎஸ்ஆர்டிசி மாற்றியிருக்கின்றது. அதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பணியாளர்களின் தேவைக்காக கேரள மாநில சாலை போக்குவரத்துக் கழகம் (Kerala State Road Transport Corporation) அதன் பழைய பேருந்து ஒன்றை நவீன பேருந்தாக மாற்றியமைத்துள்ளது. புதிய மாற்றத்தால் இப்பேருந்து நட்சத்திர உல்லாச விடுதிகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மாறியிருக்கின்றது.

பொதுவாக, பழைய பேருந்தை லக்சூரி வசதிக் கொண்ட வாகனமான மாற்றும் செயலை திரை நட்சத்திரங்களும், முக்கிய பிரமுகர்கள் சிலர் மட்டுமே செய்து வருகின்றனர். இவர்கள் தங்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழக்கமான பேருந்து அல்லது மினி பேருந்தை வாங்கி, அதனை பல லட்ச ரூபாய் செலவில் உல்லாச கப்பலுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மாற்றிப் பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையிலேயே, பணியாளர்களுக்காக கேஎஸ்ஆர்டிசி பழைய பேருந்தை உல்லாச கப்பலாக மாற்றியிக்கின்றது. கேஎஸ்ஆர்டிசியின் இந்த நடவடிக்கை அதன் ஊழியர்கள் மத்தியில் மட்டுமின்றி மக்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

குறிப்பாக, திரை நட்சத்திரங்கள் தங்களின் நெடுந்தூர பயணத்தை உல்லாச பயணமாக மாற்றவும், படப்பிடிப்பின்போது சிறிய ஓய்வு எடுக்கவுமே பேருந்தை லக்சூரி வசதிக் கொண்ட வாகனமாக மாற்றிக் கொள்கின்றனர். அவ்வாறு மாற்றப்படும் அந்த வழக்கமான வாகனம், உல்லாச கப்பல்களுக்கே டஃப் கொடுக்கின்ற அளவிற்கு அதிக சொகுசு வசதிகளைக் கொண்ட ரம்மியமான வாகனமாக இருக்கும்.

அதில் ஏசி, ஃபிரிட்ஜ், சொகுசு மெத்தை, மினி அலுவலகம், டிவி, பார் வசதி, குளியல் மற்றும் கழிவறை என பல்வேறு வசதிகள் நிறுவப்படும். இம்மாதிரியான குறிப்பிட்ட வசதிகளையே கேஎஸ்ஆர்டிசி, பயணிகளுக்காக மாற்றப்பட்டிருக்கும் பேருந்தில் இடம்பெறச் செய்திருக்கின்றது.

அதாவது, மெத்தை, ஏசி, ஃபேன், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கை கழும் இடம், சானிட்டைசர், உணவருந்தும் மேடை, குளியலறை வசதி என பல்வேறு சொகுசு வசதிகள் அப்பேருந்தில் இடம்பெறச் செய்யப்பட்டிருக்கின்றன. இதனால், கேஎஸ்ஆர்டிசி-இன் அந்த பேருந்து நவீன ரக உல்லாச விடுதியாக மாறியிருக்கின்றது.

கோழிக்கோடு போக்குவரத்து கழக பணிமனையிலேயே இந்த சிறப்பு பேருந்து உருவாக்கப்பட்டிருக்கின்றது. தற்போது, கோவிட்-19 வைரஸ் நாட்டையே உலுக்கி வருவதால், பெரும்பாலான பணியாளர்கள் வீடு செல்லாமல் பணிமனையிலேயே தங்கி பணி புரிந்து வருகின்றனர். ஒவ்வொரு பதினைந்திற்கும் அதிகமான நாட்கள் தங்கி பணி செய்யும் சூழல் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

அத்தகையோரின் தேவைக்காகவே கேஎஸ்ஆர்டிசியின் பழைய பேருந்து புதுமையான தோற்றத்தில் மாற்றப்பட்டிருக்கின்றது. இதில், பத்துக்கும் அதிகமானோர் உறங்கும் வகையில் மெத்தைகள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன. கோழிக்கோடு பணிமனையில் வைத்தே இந்த வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இதில், குளியல் அறை மற்றும் கழிவறை வசதியைப் போலவே பணியாளர்கள், தங்களின் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் வகையில் சேமிப்பு பெட்டகம் மற்றும் செல்போன் சார்ஜர் போன்ற அத்தியாவசிய வசதிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், தனிமையை உறுதிப்படுத்தும் விதமாக திரைச் சீலைகள் ஒவ்வொரு மெத்தைக்கும் வழங்கப்பட்டுள்ளது.

வெகு நாட்களாக பயனற்ற நிலையில் இருந்த பேருந்து தற்போது பணியாளர்களின் சொர்க்க வாசலாக மாறியிருக்கின்றது. மேலும், இந்த பேருந்து பயன்பாட்டில் இருந்தபோது கேஎஸ்ஆர்டிசியன்கீழ், கண்ணூர் மற்றும் கோழிக்கோடு ஆகிய பகுதியை இணைக்கும் பாலமாக இருந்து வந்தது. இதன் பயன்பாட்டுக் காலம் காலாவதியானதை அடுத்தே அப்பேருந்து பணிமனையில் ஓரங்கட்டப்பட்டது.
இந்த நிலையிலேயே மீண்டும் அப்பேருந்தை உயிர்ப்பிக்கும் விதமாக கோழிக்கோடு பணிமனை ஊழியர்கள் புதுப்பித்தலை வழங்கியிருக்கின்றனர். இதனால், பேருந்து புத்துயிர் பெற்றது மட்டுமின்றி பணியாளர்களின் உல்லாச விடுதியாகவும் மாறியிருக்கின்றது. இதுகுறித்து மீடியா ஒன் டிவி வெளியிட்ட வீடியோவைதான் நாம் மேலே பார்த்தோம்.


Click it and Unblock the Notifications








