நஷ்டத்தை ஏற்படுத்தும் நிறுவனங்களை கழற்றி விட மஹிந்திரா முடிவு!
கொரோனா பிரச்னை காரணமாக வருவாயில் பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதால், சிக்கன நடவடிக்கைகளை கையில் எடுத்து வருகிறது மஹிந்திரா. மேலும், நஷ்டத்தில் இயங்கி வரும் நிறுவனங்களை இழுத்து மூடுவதற்கும் திட்டமிட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனமாக மஹிந்திரா விளங்குகிறது. மேலும், உலக அளவில் பல முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களிலும் பெரிய அளவிலான முதலீடுகளை செய்து உலக அரங்கில் வலுவான நிறுவனமாக உள்ளது.

மேலும், தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங், ஃபோர்டு, ஜாவா உள்ளிட்ட பல நிறுவனங்களிலும் முதலீடுகளை செய்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் கொடுத்த புதிய முதலீடுகள் காரணமாக, சாங்யாங் மோட்டார்ஸ் புதிய மாடல்களை தயாரித்து அறிமுகப்படுத்தியது. அத்துடன், வர்த்தகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வரும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்த சூழலில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கார் நிறுவனங்களின் வருவாயில் பெரிய அடி விழுந்துள்ளது. அந்த வகையில், சென்ற நிதி ஆண்டின் கடைசி காலாண்டு காலத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் வருவாய் ரூ.3,255 கோடி என்ற அளவில் பெரிய இழப்பை சந்தித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் பிரச்னையால் வருவாயில் தொடர்ந்து இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, வருவாய் இழப்பை தாக்குப்பிடிக்கும் வகையில், சிக்கன நடவடிக்கைகளை மஹிந்திரா எடுக்க உள்ளது. இதனால், அந்நிறுவனம் முதலீடு செய்து நஷ்டத்தில் இயங்கி வரும் நிறுவனங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

வரவு செலவு கணக்கு அறிக்கை வெளியீட்டின்போது பேசிய அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கோ,"வருவாய் இழப்பை சரிக்கட்டும் முயற்சிகளில் உள்ளோம். மேலும், நஷ்டத்தை ஏற்படுத்தும் பிரிவுகளுக்கு புதிய முதலீட்டாளர்கள் தேவைப்படுகிறது. முதலீடுகளை பாதுகாக்கும் வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் சாங்யாங் நிறுவனத்தில் புதிய முதலீடுகளை மஹிந்திரா செய்யவில்லை. இதனால், அந்த நிறுவனம் மீண்டும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. அதேபோன்று, புதிய முதலீடுகளை தவிர்க்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கொரோனா பிரச்னையால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை சரிசெய்வதற்காக, அடுத்த 12 மாதங்களில் நஷ்டத்தில் இயங்கும் அனைத்து நிறுவனங்களையும் மூடுவதற்கும் மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. புதிய முதலீட்டாளர்கள் கிடைத்தால், முதலீடுகளை குறைப்பதற்கான திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனத்தின் இந்திய கார் வர்த்தகத்தை மஹிந்திரா கையகப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது. கொரோனா பிரச்னை காரணமாக, ஃபோர்டு நிறுவனத்தின் வர்த்தகத்தை இணைப்பதற்கு சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








