இலகு வகை மின்சார வாகன கட்டமைப்புக் கொள்கையை வெளியிட்டது மஹிந்திரா!
உலக மின்சார வாகன தினம் இன்று முதல்முறையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளுக்கு சிறப்பு சேர்க்கும் வித்ததில், சிறிய வகை மின்சார வாகனங்களை உருவாக்குவதற்கான தனது பிரத்யேக கட்டமைப்புக் கொள்கை பற்றிய சிறப்புத் தகவல்களை வெளியிட்டு இருக்கிறது மஹிந்திரா நிறுவனம்.

மின்சார வாகனத் தயாரிப்பில் மஹிந்திரா நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. மூன்று சக்கர மின்சார வாகனங்கள், மின்சார கார்கள் உற்பத்தியிலும் சிறந்து விளங்குவதுடன், புதிய மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவதிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், இன்று முதல்முறையாக உலக மின்சார வாகன தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு சிறப்பு சேர்க்கும் வித்ததில், Mahindra Electric Scalable Modular Architecture (MESMA) என்ற பெயரில் இலகு ரக மின்சார வாகனங்கள் உருவாக்கத்திற்கான தனது பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையை உலக அளவில் வெளியிட்டு இருக்கிறது.

இந்த இலகு ரக கட்டமைப்பை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மின்சார வாகனங்கள் ஏற்கனவே விற்பனையில் வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 11,000 மின்சார வாகனங்களை இந்த கட்டமைப்புக் கொள்கையின் கீழ் உருவாக்கி, விற்பனை செய்துள்ளதாகவும் மஹிந்திரா தெரிவித்துள்ளது.

மஹிந்திராவின் இந்த இலகு ரக மின்சார வாகன கட்டமைப்பு கொள்கையின் கீழ், மூன்று சக்கர மின்சார வாகனங்கள், குவாட்ரிசைக்கிள் ரக மின்சார வாகனங்கள் மற்றும் காம்பேக்ட் ரக மின்சார கார்களை உருவாக்க முடியும்.

மேலும், இந்த மின்சார வாகன கட்டமைப்புக் கொள்கையானது செயல்திறன் மற்றும் மின்சார வாகனங்கள் பயணிக்கும் ரேஞ்ச் திறனை குறிப்பிடும்படியாக இருக்கிறது. அதாவது, 44V முதல் 96V வரையிலான மின்சார வாகனங்களை இந்த இலகு ரக கட்டமைப்புக் கொள்கையின் கீழ் உருவாக்க முடியும்.

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களை விட இந்த இலகு ரக மின்சார வாகனங்கள் செயல்திறனில் மிகச் சிறப்பாக இருக்கும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது. மேலும், திரவ குளிர்விப்பு மற்றும் காற்று குளிர்விப்பு தொழில்நுட்பத்தில் இயங்கும் உதிரிபாகங்களுடன் இந்த கட்டமைப்புக் கொள்கையில் மின்சார வாகனங்கள் உருவாக்கப்படுகின்றன.

இந்த மின்சார வாகன கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்படும் வாகனங்கள் மணிக்கு 80 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கிறது. லோடு ஆட்டோ, சிறிய பயணிகள் வாகனங்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.

இதன் மின் மோட்டார்கள் 6kW முதல் 40kW வரை திறன் கொண்டாதகவும், 40 என்எம் முதல் 120 என்எம் வரை டார்க் திறனை வழங்க வல்லதாகவும் இருக்கும். மூன்று விதமான கியர்பாக்ஸ் ரேஷியோவில் இந்த வாகனங்கள் கிடைக்கும்.

மின்சார வாகனங்கள் தயாரிப்புக்கு தேவையான பேட்டரி, மின்னணு கட்டுப்பாட்டு சாதனங்கள், மின் மோட்டார்கள், சாஃப்ட்வேர், வாகன உதிரிபாகங்கள் மற்றும் சோதனை ஓட்ட மையங்கள் இருப்பதால், மிக விரைவாக புதிய மின்சார வாகனங்களை இந்த கட்டமைப்பை பயன்படுத்தி உருவாக்கும் திறனை பெற்றிருப்பதாக மஹிந்திரா பெருமிதம் தெரிவித்துள்ளது.

மஹிந்திரா எலெக்ட்ரிக் வாகனங்கள் இதுவரை 234 மில்லியன் கிலோமீட்டர் தூரம் சாலைகளில் பயணித்திருப்பதாகவும், 600 பணியாளர்கள் கொண்ட பிரிவின் மூலமாக மின்சார வாகனங்களை உருவாக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் மஹிந்திரா கூறி இருக்கிறது. இதுவரை மின்சார வாகனங்களுக்காக 50க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை உலக அளவில் பெற்றிருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








