யூஸ்டு கார்களை விற்க ஒரே நாளில் 34 ஷோரூம்கள் திறப்பு... புதிய சாதனை படைத்த மஹிந்திரா...
யூஸ்டு கார்களை விற்பனைச் செய்வதற்கான ஃப்ர்ஸ்ட் சாய்ஸ் ஷோரூம்களை மஹிந்திரா நிறுவனம் திறந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இந்தியாவில் புத்தம் புதிய வாகனங்களுக்கு இருப்பதைப் போலவே செகண்ட் ஹேண்ட் கார்களுக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இதனால், ஒரு சில நிறுவனங்கள் யூஸ்டு கார் விற்பனையில் களமிறங்கி வருகின்றன. அந்தவகையில், அண்மையில் ஜீப் நிறுவனம், அதன் காம்பஸ் எஸ்யூவி கார்களை விற்பனைச் செய்வதற்காகவே புதிய தளத்தை அறிமுகம் செய்தது.

இந்நிலையில், இந்தியாவின் முன்னணி வாகன விற்பனை நிறுவனமான மஹிந்திராவும் செகண்ட் கார் விற்பனையில் களமிறங்கியிருக்கின்றது. இந்நிறுவனம், யூஸ்டு கார் விற்பனையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.இந்நிறுவனம், மஹிந்திரா ஃப்ர்ஸ்ட் சாய்ஸ் எனும் பெயரில் இந்த வர்த்தகத்தைச் செய்து வருகின்றது.

இந்த நிலையில்தான், இந்நிறுவனத்தின்கீழ் புதிதாக 34 அதிநவீன ஷோரூம்களை அது தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அதுவும், ஒரே நாளில் இவையனைத்தும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை எந்தவொரு நிறுவனம் செகண்ட் ஹேண்ட் கார்களுக்கு இத்தனை எண்ணிக்கையில் செகண்ட் ஹேண்ட் கார்களுக்கான ஷோரூம்களை அறிமுகப்படுத்தவில்லை என்பது நாம் கவனிக்க வேண்டும்.

ஏற்கனவே இந்நிறுவனத்தின்கீழ் 1,700-க்கும் மேற்பட்ட ஷோரூம்கள் 810-க்கும் அதிகமான நகரங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதனை வலுப்படுத்தும் விதமாக புதிதாக 34 ஷோரூம்கள் இவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளன.

இத்துடன், நடப்பாண்டின் இறுதிக்குள் பயன்படுத்திய கார்களை விற்பனைச் செய்வதற்கான ஷோரூம்களின் எண்ணிக்கையை 1,800 வரை உயர்த்தவும் மஹிந்திரா திட்டமிட்டு வருகின்றது.
இதன்படி இந்தியாவின் இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களான ஜான்பூர், காசிப்பூர், ரூர்க்கி, முசாபர்நகர், திருச்சி, ஓசூர், அசாம்கர், அவுரங்காபாத், டெஹ்ராடூன் மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களும் ஒரு மாதத்திற்குள் புதிய எம்.எஃப்.சி.டபிள்யூ.எல் கடைகளைப் பெறவுள்ளன.

தற்போது, ஆக்ரா, கொல்கத்தா, லூதியானா, நாசிக், குர்கான், புனே, காஸியாபாத், அகமதாபாத் போன்ற நகரங்களில் புதிய கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
நாம் முன்னரே கூறியதைப் போல் இந்தியாவில் பயன்படுத்திய கார்களுக்கான சந்தை நாளுக்கு நாள் அதிகரித்த வருவதே மஹிந்திரா நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஒரே இடத்தில் பல விதமான தேர்வுகளை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களை அதிகமாகக் கவர முடியும் என மஹிந்திரா நம்புகின்றது. இதுவும், புதிய கார்களுக்கான ஷோரூம்களுக்கு இணையாக யூஸ்டு கார்களுக்கான ஷோரூம்களை திறக்க காரணமாக இருக்கின்றது.

அண்மைக் காலங்களாக இந்தியாவில் செகண்ட் ஹேண்ட் கார்களுக்கான சந்தை விரிவடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது கோவிட்19 வைரஸ் மட்டுமே. இந்த வைரஸ் நாம் எதிர்பாராத வகையில் பரவிக் கொண்டிருக்கின்றது. எனவே, பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த பலர் தயக்கம் காட்டுகின்றனர். அதேசமயம், தற்போதைய பொருளாதார நிலை புதிய வாகனங்களை நோக்கி நகர்வதற்கும் முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவேதான் பலர், ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இம்மாதிரியான சூழ்நிலையில்தான் ஜாம்பவான் நிறுவனங்கள் சில யூஸ்டு கார் விற்பனையைக் கையிலெடுத்து வருகின்றன.

அவ்வாறு, விற்பனைச் செய்யப்படும் பயன்படுத்தப்பட்ட கார்களை அந்தந்த நிறுவனங்கள் தற்போது அதிக கவனம் செலுத்தி சுத்திகரிப்பு செய்கின்றன. முக்கியக கோவிட்19 வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு இந்த சுகாதாரத்தை அதிகம் வழங்கும் வகையில் இந்த பிரத்யேக நடவடிக்கையை அவை மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில், மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் மூலம் விற்பனைச் செய்யும் யூஸ்டு கார்களுக்கு சுத்திகரிப்பு கிட்டை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது. இதில், ஹேண்ட் சானிட்டைசர், கிருமி நாசினி ஸ்பிரே, கையுறை மற்றும் இரு முக கவசங்கள் அடங்கும். இத்துடன், வாகனத்தை எப்படி பாதுகாப்பானதாக வைத்துக் கொள்வது என்பதற்கான கையேடை அது வழங்க இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








