இந்திய தயாரிப்பிற்கு தடை போடும் அமெரிக்கா... காரணம் தெரிஞ்சா மிரண்டு போய்ருவீங்க!
பிரபல மஹிந்திரா நிறுவனத்தின் ராக்ஸர் ஆஃப்-ரோடு வாகனத்திற்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கின்றது மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் விற்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், அமெரிக்காவிலும் மஹிந்திரா நிறுவனம் அதன் குறிப்பிட்ட புகழ்வாய்ந்த வாகனங்களை களமிறக்கி வருகின்றது.

அவ்வாறு, களமிறக்கப்படும் மஹிந்திரா ராக்ஸர் ஆஃப்-ரோடர் வாகனத்திற்குதான் தொடர் தடையை ஏற்படுத்தி வருகின்றது ஃபியட் கிரிஸ்லர் நிறுவனம். இந்நிறுவனம், அதன் ஜீப் ரேங்லர் காரை ஒத்ததாக இருப்பதாகக் கூறி இந்த தடையை ஏற்படுத்தி வருகின்றது.

இதுகுறித்த வழக்கு ஒன்றை சர்வதேச வர்த்தக ஆணையத்திடம் (International Trade Commission) கடந்த 2019ம் ஆண்டு அந்த நிறுவனம் தொடர்ந்திருந்தது. அந்த வழக்கில் அது வெற்றியையும் பெற்றுவிட்டது. எனவே மஹிந்திரா நிறுவனத்தால் ராக்ஸர் ஆஃப்-ரோடர் வாகனத்தை அமெரிக்காவில் விற்பனைச் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, மஹிந்திரா நிறுவனம் அதன் ராக்ஸர் மாடலில் சர்வதேச வர்த்தக ஆணையத்திடம் அனுமதிப் பெற்று பல்வேறு மாற்றங்களைச் செய்து 2020 புதுப்பித்தது. இருப்பினும், தற்போதும் ஃபியட் நிறுவனம் பழையக் காரணங்களையும், தீர்ப்பையும் காட்டி ராக்ஸர் விற்பனையைத் தொடர்ச்சியாக தள்ளிப் போட்டே வருகின்றது.

இந்த நிலையில்தான், ஃபியட் நிறுவனத்தின் தடுக்கும் செயலுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக சர்வதேச வர்த்தக ஆணையத்தின் உதவியை நாடியுள்ளது. இதுகுறித்து தொடர்ந்துள்ள வழக்கில், "ராக்ஸர் காரில் தனித்துவமான க்ரில் அமைப்பு மற்றும் லோகோ என அனைத்தும் மாற்றப்பட்டும் ஃபியட் க்ரிஸ்லர் தொடர் இடையூறுகளைச் செய்து வருகின்றது.

இதன்மூலம், இதுவரை அது கால்தடம் பதிக்காத திறந்தவெளி மற்றும் மிலிட்டரி ஸ்டைலிலான வாகன சந்தையில் நுழைய முயற்சித்து வருகின்றது" என பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.

மஹிந்திரா நிறுவனம் வட அமெரிக்காவில் உள்ள உற்பத்தியாலையில் வைத்தே ராக்ஸர் உள்ளிட்ட குறிப்பிட்ட உலக புகழ்வாய்ந்த கார்களைத் தயாரித்து வருகின்றது. 50 சதவீத உதிரிபாகங்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்தே அங்கு வாகனங்களைத் தயாரிக்கும் பணிகளைச் செய்து வருகின்றது.

இந்த காருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் மஹிந்திராவின் வட அமெரிக்க நிர்வாகம் அக்காரை அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் இருந்து நீக்கவில்லை. அது தற்போது காட்சியளிக்கின்றுத. அதன்படி, ராக்ஸர் ஆஃப்-ரோடர் காரின் மேனுவல் மாடலின் விலை அந்நாட்டு மதிப்பில் 15,999 டாலர்களாக நியமிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, ஆட்டோமேட்டிக் வேரியண்டிற்கு 16,999 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் இந்த ராக்ஸர் ஆஃப்-ரோடு வாகனத்தை 2018ம் ஆண்டின் மத்தியில் அமெரிக்காவில் அறிமுகம் செய்தது. இது மாடிஃபை செய்வதற்கு ஏற்ற வாகனமாக இருப்பதால் அமெரிக்கர்கள் அக்காருக்கு அமோகமான வரவேற்பை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையிலேயே ஜீப், அதன் ரேங்லர் மாடலை காப்பியடித்து ராக்ஸர் ஆஃப்-ரோடர் வாகனத்தை தயாரித்ததாகக் கூறி தடை வாங்கியுள்ளது. தற்போதுவரை இந்த தடையை நீக்க முடியாமல் மஹிந்திரா நிறுவனம் போராடிக் கொண்டிருக்கின்றது. இரு மாடல்களுக்கும் பெரியளவில் வித்தியாசங்கள் இருந்தும் இந்த நிலையே அங்கு நீடித்து வருகின்றது. தற்போது ராக்ஸர் புதிய க்ரில் அமைப்புடன் புதுப்பொலிவுடன் காட்சியளித்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

பொதுவாக இதுபோன்ற டூப்ளிகேட் செய்யும் வேலையெல்லாம் அதிகளவில் சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களே செய்யும். அவ்வாறு, அது காப்பியடித்து தயாரித்த வாகனங்கள் பல. அதேபோன்று, காப்பியடிக்கப்பட்டதால் தடைக்குள்ளான வாகனங்களும் பல. ஆனால், இம்முறை இந்திய நிறுவனத்தின்மீது இந்த குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த வாகன உற்பத்தி நிறுவனத்திற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








