புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்காக காத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்... என்னனு தெரியுமா?
புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

இந்திய சந்தையில் மஹிந்திரா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 18,212 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 14,635 ஆக இருந்தது. இது 24.4 சதவீத வளர்ச்சியாகும். இதன் மூலம் இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் மஹிந்திரா நிறுவனம் 5வது இடத்தை பிடித்துள்ளது.

இதற்கு புதிய தலைமுறை மஹிந்திரா தார் முக்கியமான காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் தார் எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடலை மஹிந்திரா நிறுவனம் கடந்த அக்டோபர் 2ம் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் மஹிந்திரா நிறுவனம் வெறும் 53 தார் எஸ்யூவிக்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு நவம்பரில் இந்த எண்ணிக்கை 2,569 ஆக உயர்ந்துள்ளது. குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளிலும் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி சிறப்பாக செயல்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350? உங்களுக்கான பதில் இந்த வீடியோவில்!
புதிய தலைமுறை தார் எஸ்யூவிக்கு, குளோபல் என்சிஏபி அமைப்பு 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை வழங்கியுள்ளது. பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என இருவருக்குமான சோதனைகளிலும், புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த புதிய எஸ்யூவிக்கு கடந்த மாத தொடக்கத்திலேயே 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன.

எனவே அடுத்த மாதத்தில் இருந்து தார் எஸ்யூவியின் உற்பத்தியை மஹிந்திரா நிறுவனம் அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலையில் மஹிந்திரா நிறுவனம் ஒரு மாதத்திற்கு 2,000 புதிய தார் எஸ்யூவிகளை மட்டுமே உற்பத்தி செய்து வருகிறது. ஆனால் 2021ம் ஆண்டு ஜனவரி முதல் இதனை மாதத்திற்கு 3,000 யூனிட்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

தற்போதைய நிலையில் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் ஒரு சில வேரியண்ட்களுக்கு 9 முதல் 10 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மஹிந்திரா நிறுவனம் புதிய தார் எஸ்யூவியின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. தார் எஸ்யூவிக்காக காத்திருப்பவர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2020 மஹிந்திரா தார் எஸ்யூவி பலரையும் கவர்ந்துள்ள நிலையில், காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக இருப்பதால், முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் பலர் அதிருப்தியடைந்துள்ளனர். சமூக வலை தளங்களில் அவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் மஹிந்திரா நிறுவனம் உற்பத்தியை அதிகரிக்கும்பட்சத்தில், காத்திருப்பு காலம் சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி காரில், 2.2 லிட்டர் நான்கு-சிலிண்டர் டீசல் இன்ஜின் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் இடம்பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications








