இந்தியாவுக்காக 5 டோர் ஜிம்னி எஸ்யூவியை உருவாக்கும் மாருதி சுஸுகி!
இந்திய சந்தைக்கு ஏதுவான 5 டோர் ஜிம்னி எஸ்யூவி மாருதி சுஸுகி உருவாக்கி வருவது தெரிய வந்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலக அளவில் பட்ஜெட் விலையில் மிகச் சிறந்த ஆஃப்ரோடு மாடல்களில் ஒன்றாக சுஸுகி ஜிம்னி எஸ்யூவி விற்பனையில் உள்ளது. ஆசிய நாடுகளில் சுஸுகி ஜிம்னி எஸ்யூவி குறிப்பிடத்தக்க அளவு வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த எஸ்யூவி இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று நீண்ட காலமாக கூறப்பட்டு வந்தாலும், அது கானல் நீராகவே இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் சுஸுகி ஜிம்னி எஸ்யூவியின் சியரா மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. மாருதி சுஸுகி அரங்கிற்கு வந்த பார்வையாளர்களை இந்த புதிய மாடல் வெகுவாக கவர்ந்தது. இதனால், இந்தியாவில் இந்த புதிய மாடல் வருவது உறுதியானது. இது இந்திய ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்களையும், கார் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், சுஸுகி ஜிம்னி எஸ்யூவியானது வெளிநாடுகளில் 3 டோர் மற்றும் 5 டோர் மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த மாடலானது 3 டோர் மாடலாக இருந்தது இந்தியர்களுக்கு சிறிய அளவிலான ஏமாற்ற்த்தை தந்தது.

இந்த நிலையில், இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக, சுஸுகி ஜிம்னி எஸ்யூவியின் 5 டோர் மாடலை மாருதி நிறுவனம் உருவாக்கி வருவதாக ஆட்டோகார் இந்தியா தளத்தில் செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் 3 டோர் மாடலுக்கு வரவேற்பு குறைவாக இருக்கும் என கருதி, 5 மாடலை இந்தியாவுக்கு ஏற்ற அம்சங்களுடன் மாற்றங்களை செய்து வருகிறதாம் மாருதி சுஸுகி.

மாருதி சியாஸ், எர்டிகா உள்ளிட்ட கார் மாடல்களில் பயன்படுத்தப்படும், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் இந்த புதிய மாருதி ஜிம்னி எஸ்யூவியிலும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

உலக அளவில் விற்பனையில் இருக்கும் சுஸுகி ஜிம்னி எஸ்யூவியில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் லோ ரேஞ்ச் கியர்பாக்ஸ் போன்ற ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற சிறப்பு தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகின்றன. இந்தியாவிலும் இந்த தொழில்நுட்பங்கள் தக்க வைக்கப்படும்.

மாருதி ஜிம்னி எஸ்யூவியில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் அம்சங்கள் இடம்பெறும். ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

புதிய மாருதி ஜிம்னி எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், டிராக்ஷன் கன்ட்ரோல் போன்ற பல பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றிருக்கும்.

குஜராத் மாநிலத்தில் உள்ள சுஸுகி கார் ஆலையில் வரும் ஜூன் மாதம் சுஸுகி ஜிம்னி எஸ்யூவியின் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. எனினும், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, குறித்த நேரத்தில் இந்த எஸ்யூவியின் உற்பத்தி துவங்கப்படுமா என்பதில் சந்தேகம் இருக்கிறது.

ரூ.10 லட்சத்திற்குள் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். மாருதி ஜிப்ஸி எஸ்யூவிக்கு மாற்றாக நிலைநிறுத்தப்படும். மாருதியின் நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனைக்கு கொண்டு வரப்படும். வரும் பண்டிகை காலத்தில் இந்த மாடலானது விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். டிசம்பர் மாதத்திலிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








