ஆயுதபூஜை பண்டிகையில் பென்ஸ் கார்களை வாங்கி குவித்த இந்தியர்கள்! 550 கார்கள் டெலிவிரி செய்யப்பட்டதாம்
இந்த நவராத்திரி மற்றும் தசரா பண்டிக்கை காலத்தில் 550 கார்களை இந்தியாவில் டெலிவிரி செய்துள்ளதாக மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த 2019ஆம் ஆண்டை தொடர்ந்து இந்த ஆண்டிலும் இந்த பண்டிக்கை காலத்தில் இத்தகைய இமாலய எண்ணிக்கையிலான கார்களை மெர்சிடிஸ் டெலிவிரி செய்துள்ளது. இந்த 550 கார்களில் பெரும்பாலான கார்கள் டெல்லி என்சிஆர், மும்பை, குஜராத் உள்ளிட்ட வட இந்திய நகரங்களில் தான் டெலிவிரி செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக டெல்லி என்சிஆர் பகுதியில் மட்டும் 175 கார்களை அதன் உரிமையாளர்கள் டெலிவிரி எடுத்துள்ளனர். தற்போதைய கொரோனா சூழ்நிலையிலும் இந்த 2020ஆம் ஆண்டின் மூன்றாம் கால்பகுதியில் குறிப்பிடத்தக்க இலாபத்தை ஈட்டியுள்ளதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

டெல்லி என்.சி.ஆர், மும்பை மற்றும் குஜராத் போன்ற முக்கிய சந்தைகளில் வலுவான தேவையை கண்டதாக கூறியுள்ள இந்நிறுவனம் இயல்புநிலை திரும்பி வருவதையும், தங்களது கார்களில் சி-கிளாஸ், இ-கிளாஸ் செடான்கள் மற்றும் ஜிஎல்சி, ஜிஎல்இ மற்றும் ஜிஎல்எஸ் எஸ்யூவிகளுக்கு அதிகளவில் தேவை இருப்பதையும் உணர்ந்ததாக தெரிவித்துள்ளது.

இத்தகைய வளர்ச்சி குறித்து மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் சிஇஒ-வுமான மார்டின் ஸ்க்வெங்க் கருத்து தெரிவிக்கையில், இந்த ஆண்டு பண்டிகை காலம் மிகவும் வலுவான பதிவுகளுடன் தொடங்கியுள்ளது, இந்த நேர்மறையான வாடிக்கையாளர் உணர்வை கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த ஈர்க்கக்கூடிய எண்ணிக்கையிலான டெலிவிரிகள் ஒரு நல்ல பண்டிகை காலத்தை உணர்த்துகின்றன. மேலும் ஆடம்பர கார் வாங்குவோர் மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்ட் மற்றும் தயாரிப்புகளின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் உறுதியாக அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என கூறினார்.


Click it and Unblock the Notifications








